Monday, December 1, 2014

காவியத்தலைவன் - தமிழ்சினிமா தொடாத தளம்

தவம் போன்ற இடைவிடாத பயிற்சியையும், கடுமையான கட்டுப்பாட்டையும் கொண்டு நடிப்புக்கலையின் உச்சத்தை அடைய துடிக்கும் கோமதிநாயகம் பிள்ளையை, தனது கற்பனையை மட்டுமே கொண்டு, கலையை கைவசப்படுத்தி, கடந்து செல்கிறான் காளியப்பா பாகவதர். தான், உயிருக்குயிராய் நினைக்கும் குருவும், காளியின் கற்பனையாலும், ஆர்பாட்டமில்லாத இயல்பான நடிப்பாலும் தூண்டபடுகிறார்.. அவனையே ராஜபார்ட் வேஷத்திற்க்கு பரிந்துரைக்கிறார்.


தான் செய்த வேள்வி போன்ற பயிற்சிக்கும், கடைபிடித்த ஒழுக்கத்திற்க்கும் என்ன அர்த்தம்? ஒழுக்கமற்றவனின் கலை, எப்படி தனது கலையை விட மேலானதாகும்? என்ற கேள்விகளால் நொந்து போகிறான் கோமதி நாயகம் பிள்ளை.. காளியப்பா பாகவதரை, தனது வாழ்வின் வெற்றி மூலம் வென்றுவிட துடிக்கும் போராட்டமே காவியத்தலைவன்.




1930களின் தமிழகநாடகமேடை வரலாற்றைக் கொண்டு ஒரு திரைக்கதையை எழுதி, அதை சினிமாவாக எடுக்க முயன்ற துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். வறுமையான வாழ்க்கை சூழலால் தள்ளப்பட்டு ஐந்து வயதிலேயே நாடக உலகிற்க்குள் தள்ளப்பட்டு, கந்தர்வகுரலோன் என்று செல்லுமிடங்களிலெல்லாம் வெற்றிக்கொடிநாட்டி தனது 28வது வயதிலேயே மறைந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கை, ஒரு சினிமாவுக்குண்டான உணர்ச்சிகரங்களால் நிரம்பியது.



எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாத மகத்தான ஆளுமை கே.பி.சுந்தராம்பாள். சிறுமியாக புகைவண்டிகளில் பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாளை, ஒரு மேதை கண்டெடுத்து, நாடக உலகில் அறிமுகப்படுத்துகிறார். தனது இனிமையான குரலாலும், உணர்ச்சிகரமான நடிப்பாலும் நாடக உலகின் முடிசூடா ராணியாக வலம் வருகிறார், கே.பி.எஸ். இலங்கையில் தங்கி நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சுந்தராம்பாளுக்கு இணையாக நடிக்க நாடக நடிகர்கள் தயங்குகிறார்கள்.. எஸ்.ஜி.கிட்டப்பாவை ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள்.. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டாம், அவர், உன்னை நாடக மேடையிலேயே, தனது நடிப்பால் சாய்த்துவிடுவார் என்று இருவரையும் தனித்தனியாக எச்சரிக்கிறார்கள் நலம்விரும்பிகள். சவாலை ஏற்று இருவரும் இணைந்து ஒருவரை ஒருவர் வெல்ல முயலுகிறார்கள்..கலையின் வடிவமாக ஒருவரை ஒருவர் கண்டுக் கொள்கிறார்கள்.. மனமொத்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள்..பிறகு, வாழ்க்கையின் சவால்களை வெல்லமுடியாமல், கசப்புணர்வு கொள்கிறார்கள்.. மதுவில் விழும் கந்தர்வகுரலோன், பல இழப்புகளுக்கு பிறகு தனது 28 வது வயதிலேயே இறக்கிறார்.தனது 25வது வயதில் வெள்ளையுடை அணிந்து, இனி யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சபதமெடுத்து அதன்படி தனது வாழ்க்கை முழுவதும் தனியராகவே இருந்து மறைகிறார் சுந்தராம்பாள்.




காவியத்தலைவனில் காளிக்கும், வடிவாம்பாளுக்குமான வாழ்க்கை ஒரு சிறுபகுதிதான்..காளியை வென்றுவிட துடிக்கும் கோமதிநாயகத்தின் மனப்போராட்டமே, கதையை நிகழ்த்திச் செல்கிறது. ப்ருதிவிராஜ், சித்தார்த் இருவருக்குமே, தாங்களும் திரையுலகில் இருந்தோம் என்ற தடத்தை விட்டுச் செல்வதற்க்கான வாய்ப்பு இது.

துரோணரின் மதிப்பை பெற்று, அர்ஜுனனை வென்று தான் முதல்மாணவனாக வேண்டும் என்ற அஸ்வத்தாமனின் துடிப்பை, பொறாமையை, ஆற்றாமையை அழகாக பிரதிபலிக்கிறார் ப்ருதிவிராஜ்.

தான் நினைத்தது போலவே வெற்றிப் பெற்று, பல நாடுகளுக்கும் சென்று புகழ்பெற்று, தான் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் மிளிர திரும்பும் கோமதிநாயகம், தமிழகத்துக்கு வந்தவுடன் விசாரிப்பது காளியப்ப பாகவதரை பற்றி. வாழ்க்கை முழுவதும் கோமதிநாயகத்தை, தூங்கவிடாமல் துரத்தியடிப்பது, காளியின் கலைமீதுள்ள பயம் தான். கோமதியால், காளியின் கலையை இறுதிவரை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.. குருவிடம் கேட்கும் போது, "எல்லாத்தையும் விளக்க முடியாது, சிலதை உணரனும்" என்று சொல்லிச்செல்கிறார்.. ஆனால் தன்னுடைய கலையை விட காளியின் கலை ஏதோ ஒரு தளத்தில் மேன்மையானது என்ற அச்ச உணர்வே கோமதியை, 
உடல்நலன் குன்றி படுக்கையில் கிடக்கும்போதும், காளிக்கு ராஜபார்ட் கொடுக்கவிடாமல், தானே நடிக்கும்படி செய்கிறது. ஆனால், எல்லாவற்றையும் இழந்து, குடியில் அழிந்துக் கொண்டிருக்கும் நிலையிலும், கர்ண மோட்சத்தில் அர்ஜுனனாக ஒரே ஒரு காட்சியில் தோன்றும் காளி, தனது உன்னதமான நடிப்பால் மக்களை வெல்கிறான்... மீண்டும் புகழ்பெறுகிறான்.


பழிசுமத்தப்பட்டு, குருவின் சாபத்துக்கு ஆளாகி துடிப்பது, குருவின் குற்றத்தால், காதலியை இழந்த சுயஇரக்கத்தில், குருவுக்கே சாபம் கொடுப்பது என தமிழ் சினிமா தொடாத தளங்களில் கதை பயணிக்கிறது. 1930களின் சூழ்நிலையை காட்சிபடுத்துவதில் பெருமளவு வெற்றிப்பெற்றிருக்கிறார் வசந்தபாலன். ஐந்து வருடங்கள் கழித்து, குடியில் தள்ளாடியபடி எதிர்பாராமல், காளி கோமதிநாயகத்தை சந்திக்கும் காட்சி படத்தின் உச்சங்களில் ஒன்று.. ராஜமார்த்தாண்டன், தனது குரு பேராசிரியர் ஜேசுதாசனை சந்திக்கும் அறம் சிறுகதையை நினைவுபடுத்துகிறது இந்த காட்சி..

உலகமே கொண்டாடினாலும், காளியின் மதிப்பை பெற போராடுகிறாள் வடிவு..காளியின் கலையின் மீதான தன்னுடை பித்தை எதன் பொருட்டும் இழக்காமல், காளிக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வெளியேறும்போது "ஜமினுக்கு மகளை அனுப்பும் அம்மா எனக்கும் தேவையில்லை" என்ற ஒரு வரி வசனத்தில், அன்றைய சூழல் விளக்கப்பட்டு விடுகிறது.. 

காளியைக் கொல்லுமளவுக்கு கோமதியை தூண்டுவது எது? குருவின் அன்பு, வடிவாம்பாளின் காதல், மக்களின் பாசம் என எல்லாவற்றையும் காளியிடம் இழக்கும் கோமதிநாயகத்தின் மீது பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துவதில் படம் வெற்றிப்பெற்றுவிடுகிறது. இந்த இழப்புகள் அனைத்தையும் விட, நாடக காண்ட்ராக்டரிடம் தான் இழந்த நகைகளை காளி மீட்டு வந்து தன்னிடமே கொடுத்ததைதான் தன்னால் மன்னிக்கவே முடியவில்லை என்கிறான் கோமதி.. பகைமையின் உச்சக்கட்ட கொடூரத்தை, மனதின் விசித்திரத்தை, வசனத்தின் வழியாக வரைந்துவிடுகிறார் ஜெயமோகன்.


வாழ்க்கையின் எல்லாபடிகளிலும் தொடர்ந்து காளியால் தோற்கடிக்கப்படும் கோமதிநாயகம் பிள்ளை, காளியை கொன்றுவிடுவது மூலம், அவனை வென்றுவிடலாம் என்று, துணிகிறான். ஆனால்,  காளி, தனக்கு கோமதியால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்தே இருப்பதாக சொல்கிறான். இதை வெளிப்படுத்தும் தருணத்தில், கோமதிநாயகம் இழியுணர்ச்சியால் மேலும் பலபடிகள் பின்னோக்கி தள்ளபடுகிறான். என்னை கொல்வதன்மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும் என்றால், நான் சாகத்தயார் என்று சொல்வதன் மூலம், காளி வெல்லவே முடியாத இடத்துக்கு உயர்கிறான். இனி அவனை கொல்வதன்மூலம் ஒருபோதும் தன்னால் வெல்ல முடியாது என்று புரிந்துக் கொள்ளும் கோமதி, கையில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்த சூழலில் அவனை கொல்லாமல் விடுவதன்மூலம் தன்னுடைய விடுதலையை அடைய நினைக்கிறான். அதற்கு வாய்ப்பளிக்காமல் காளி இறந்துபோகிறான். கோமதி, காளியின் மீது கொண்டிருந்த வெஞ்சினத்தை தெரிந்துவைத்திருந்த போதும், தொடர்ந்து காளி அவனை மன்னிப்பதன் மூலம், கோமதியை மீள முடியாத இழிவுணர்ச்சிக்குத் தள்ளுகிறான். காளிக்கு தன்னுடைய கலையின் மேன்மை புரிந்திருக்கிறது. சொல்லபோனால், பெருந்தன்மை மற்றும் மன்னிப்பு மூலம் காளியும் கோமதியை தண்டித்துக் கொண்டேதானே இருக்கிறான்.


படத்தின் குறைகள்? உண்டு. உண்மையில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நிகரான வேடம் கொண்ட நாசரின் பாத்திரம் மீது, சில காட்சிகள் மூலம், நமக்கு பெருமதிப்பும் வியப்பும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் இயக்குநர். அதுவே பிற்பாடு நிகழும் சீடர்க்குள்ளான போட்டிக்கு சரியான களமாக அமைந்திருக்கும்..  அதே போல், வடிவாம்பாள் பாத்திரத்தின் கனத்தை, கோமதி அவள் மீது கொண்டிருக்கும் பிரேமையை, பார்வையாளனுக்கு சரியாக கடத்தியிருக்கவேண்டும். இவையிரண்டும் நிகழ்ந்திருந்தால், கோமதியின் இழப்பை, ரசிகன் இன்னும் ஆழமாக புரிந்துக் கொண்டிருக்க கூடும்.

சுவாமிகள் மீது இயல்பாக ஏற்ப்ட்டிருக்க வேண்டிய வியப்பையும் மதிப்பையும், குறைப்பதில் ஆரம்பக்கட்ட காமெடிகாட்சிகளுக்கும் பங்குண்டு. இசை தனிஆல்பமாக சிறப்பானது. பின்ணனி இசையும் சரியாக பொருந்தியுள்ளது ஆனால், பாடல்கள் 1930களின் இசையை பிரதிபலிக்கவில்லை. பாகவதர் பாடல் போன்ற பாவத்துடன் கூடிய ஒருபாடல் இதை சரிக்கட்டியிருக்க கூடும்.




இது போன்ற குறைகள் இருந்த போதிலும், காவிய தலைவன் தொட்டிருக்கும் இடம் அலாதியானது..மரியாதைக்குரியது. நான் பார்த்த தோக்கியோ திரையரங்கில், பார்த்தவர்கள் அனைவரும் படம் முடிந்தவுடன் கைத்தட்டினார்கள். இதில் ஜப்பானியர்களும் அடங்கும். ஒரு நல்லபடத்தை பார்த்த திருப்தி அவர்களது முகத்தில் இருந்தது. 














9 comments:

  1. நல்ல பதிவு.சிறு குறைகள் இருந்தாலும், இது போன்ற படங்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் நல்ல தரமான படங்கள் வரும். ஜப்பானில் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. படத்தை பார்க்க தூண்டுகிறது உங்களுடைய விமர்சனம்,, அருமை

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஏன் டெலிட் செய்தாய்? உன் கேள்வி சரியானதே. பதில் மிக நீண்டதாய் அமையும் என்பதால் சற்று தாமதித்தேன்.

      Delete
  4. அருமையான பதிவு!
    ஒரேயொரு கருத்து:

    "ப்ருதிவிராஜ், சித்தார்த் இருவருக்குமே, தாங்களும் திரையுலகில் இருந்தோம் என்ற தடத்தை விட்டுச் செல்வதற்க்கான வாய்ப்பு இது."

    இந்த இடத்தில் 'தமிழ் திரையுலகில்' என்று குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!
    ஏனென்றால் மலையாளத் திரையுலகில் ப்ருதிவிராஜ் பல திரைப்படங்களில் தனது அருமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்!
    உதாரணம்: செல்லுலாய்ட்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Write your valuable comments here friends..