Wednesday, December 11, 2013

மு.ராமசாமியின் வியாபாரமாயணம்

ஓய்வுப் பெற்ற நாடகத்துறை பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் வியாபாரமாயணம் நாடகம், திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரியில் ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த இந்த நாடகத்தில் இரண்டே பேர் தான் நடிகர்கள். மு.ராமசாமியும், கூத்துப்பட்டறையை சேர்ந்த ஆனந்தசாமி இருவரும் தங்களது சிறப்பான உடல்மொழி மற்றும் வசனத்தால் கலக்கி எடுத்து விட்டனர். மைக் கிடையாது. ஆனால் கடைசி பார்வையாளன் வரை குரல் கேட்டது. குப்பைத்தொட்டியில் எடுத்த ஒரு பெட்டி, தொப்பி, கண்ணாடி,என்று எளிமையான அரங்க பொருட்கள். 

வியாபாரமயமாகும் உலகம் எப்படியெல்லாம் தேவைகளை உருவாக்கி தங்களது பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டுகிறது என்பதை அழகான காட்சி மற்றும் வசனங்களால் காட்சிபடுத்தினர். பார்க்க வந்திருந்த மாணவர்கள் யாரும் பாதியில் வெளியே செல்லவில்லை. அரசியல் வசனங்களை புரிந்து கொண்டு ஆங்காங்கே சிரித்தனர் மாணவிகள். 



கடைசியில் நன்றியுரை வழங்கிய கல்லூரி பேராசிரியர்தான், மு.ராமசாமி அவர்கள் பிதாமகன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் என்று அறிமுகம் செய்ய ஆரம்பிக்க, மு.ராமசாமி இடைமறித்து, தயவு செய்து தன்னை நாடக ஆசிரியர் அல்லது கூத்தாடி என்று அறிமுகபடுத்தினால் போதும் என்று சொன்னார். ஆவேசத்துடன் லட்சியபோக்கை கடைபிடித்து, வாழும் நண்பர்களை காணும்கணந்தோறும் சிலிர்த்துதான் போகிறது.  

கடைசி நேரத்தில் எனக்கு தகவல் தெரிவித்து அழைத்து சென்ற வில்வம், மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி. 

Sunday, December 8, 2013

ஞாநியுடன் கேணி சந்திப்பு


  1. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சென்னை வந்திறங்கிவிட்டு, சென்னை ஈஸ் டூ ஹாட், ஐம் ஸ்டில் இன் ஜெட்லாக் என உதார் விடும் வழக்கமான என்.ஆர்.ஐயின் பதிவல்ல இது. வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம், ஊருக்கு டிக்கெட் போட்டுவிடும், வாய்ப்பில்லை என்றால் வாய்ப்பை உருவாக்கிவிடும் (அட, இரண்டாவது பெண் குழந்தை எல்லாம் இந்த லிஸ்ட்லே சேராதுங்க) ஒரு என்.ஆர்.ஐயின் பதிவுதான் இது. 


    நெடுநாட்களாக ஞாநி அவர்கள் நடத்து...ம் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையிருந்தது. இந்த முறை 10.00 மணிக்கு திருச்சிக்கு டிக்கெட் போட்டுவைத்திருந்த நிலையிலும் கூட்டத்துக்கு எப்படியாவது போய்விடுவது என்று முடிவு செய்து பைக் எடுத்தேன். கலைஞர் கருணாநிதி நகர் எல்லாம் போய் வருடகணக்காகிறது என்பதால், முகவரி கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் அழகிரிசாமி சாலை முனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் வீட்டு நெம்பர் 39 என்றால், பயசா, புதுசா என்றார்கள். நல்லவேளை பத்திரிக்கையாளர் ஞாநி என்று சொன்னவுடன் சரியாக அடையாளம் காட்டினார்கள். 

    கூட்டம் சிறப்பாக நடந்தது. பத்ரி தனது தொழில் பற்றியும், அதில் தான் கடைபிடிக்கும் நேறிகள் பற்றியும் நேர்மையாக பேசினார். பள்ளிக் குழந்தைகளிடம் படிப்பார்வத்தை தூண்டுவதற்க்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி சொன்னார். பெரும்பாலான பள்ளி குழந்தைகள் அதுவும் எட்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் கூட தமிழை சரியாக படிக்க முடியாமல் திண்டாடும் அவல நிலையை அவர் கூறிய போது, மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போதைய பொருளாதர நிலையில், கார்ப்பேரஷன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையிலேயே சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும், கடுமையில் ஏழ்மையில் தவிக்கும் குழந்தைகளே. இப்படி அவர்கள் தமிழ் கூட படிக்கமுடியாது திண்டாடினால் அவர்கள் என்ன ஆவார்கள் என்று நினைக்கும் போது, நமது கல்வியாளர்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கடும் கோபம் எழுகிறது. 

    கூட்டம் முடிந்தவுடன் தி.நகர் வழியாக திரும்பினேன். சென்னையின் எல்லா சாலைகளிலும் ஆட்டோக்கள் சடுகுடு ஆடுவதை காண முடிந்தது. சாலையில் வரும் எந்த வாகனமும் ஒரு பொருட்டே அல்ல என்பது போல், மோதுவது போல் போய் சடாரென்று திருப்புவதில் என்னதான் சுகமோ இவர்களுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோ, பாண்டி பஜார் சாலையில் வேகமாக வந்து கட்டடிக்க, சாலையை கடந்து கொண்டிருந்த ஒரு நாற்பது வயது அம்மாவும், ஆறு வயது பெண் குழந்தையும் திக்குமுக்காடினார்கள். எப்போதும் திருப்புவது போல், ஆட்டோகாரர் ஸ்டியரிங்கை திருப்பி விலகினார். ஆனால், குழந்தையின் காலில் பின்சக்கரம் ஏறி விட்டது. வலியில் துடித்து விட்டாள். அந்த ஆட்டோகார தடியன், கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தலையை மட்டும் வெளியே நீட்டி, சின்னகொயந்தையை தூக்கிகினு வராம, நடத்தி கூட்டிகினு போவுது பார் என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான். அந்தம்மா குற்ற உணர்ச்சியில் தவித்து போய் கண்ணில் நீர் வர வலியால் தவிக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு, நகர்ந்தார். 

    சென்னை சாலைகள் எப்போதும் நடப்பவர்களுக்கான சாலைகள் அல்ல என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக அவர்கள் சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களில் நடப்பதே ஒரு குற்றம் என்ற வகையில் தள்ளப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. சாலையின் எந்த இடத்திலும்
    இவர்கள் கடப்பதற்க்கான சீப்ரா கிராஸிங் இடங்களை காண முடியவில்லை. ஒரு பக்கம் பிளாட்பர கடைகளும், மற்றொரு பக்கம் ரவுடி ஓட்டுநர்களாலும் சுரண்டப்பட்டு, குற்ற உணர்ச்சியிலேயே மக்களை நடமாட விட்டிருப்பதுதான் நமது அரசாங்கங்களின் சாதனை போலும்.

Tuesday, December 3, 2013

குடை நிழல் தந்த மமதை - தெளிவத்தை ஜோசப்

ஈழ எழுத்தாளர்களில், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரது எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இருவரின் எழுத்துக்களிலும் எனக்கு பிடித்த பொதுவான விஷயம் அங்கதம் தான். அ.முத்துலிங்கம் தொடர்ந்து பல நாடுகளிலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருக்கிறார். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பணி புரிந்திருக்கிறார். அந்த வாழ்க்கையில் கண்ட ஏற்றதாழ்வுகள், பார்த்த பலதரப்பட்ட மனிதர்கள், சுகதுக்கங்கள் தந்த பக்குவம், வாழ்வு குறித்து ஒரு எள்ளல் பார்வையை முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதுவே எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த எள்ளல் குதித்தோடி நம்மை கட்டிபோடுகிறது.

ஷோபாசக்தியோ புலிகள் இயக்கத்தில் சில காலம் இருந்தவர். பிறகு சோஷலிச சிந்தனையில் உந்தப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி,குடிபெயர்ந்தவர்.போராட்ட வாழ்வில் கண்ட தியாகங்கள், அபத்தங்கள்,பொருளற்ற இறப்புகள், தற்செயல்களே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாக,மாறும் அபத்தம் அவருக்கு வேறுவிதமான பகடியை தந்திருக்கிறது. உதாரணம், "கப்டன்" சிறுகதை. 

இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை இருவருமே ஈழத்தமிழ்ர்கள். ஆனால், 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் அரசாங்கத்தினரால் தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்க்காக  இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்பட்டு, 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தால், ஒரே இரவில் நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையக தமிழர்களிடம் இருந்து அவர்கள் வாழ்வை எழுத்தில் வடிக்க கூடிய சொல்லிகொள்ளும்படியான எழத்தாளர்கள்  தோன்றவில்லை என்றே நினைத்திருந்தேன். 



இந்த பின்புலத்தில்தான், இந்த வருட விஷ்ணுபுரம் விருது, தெளிவத்தை ஜோசப் என்ற மலையக தமிழருக்கு வழங்கபடுவதை குழுமம் மூலம் அறிந்து, அவரது குடை நிழல் நாவலை வாசித்தேன். எந்த அரசியல் பின்புலமும இல்லாத ஒரு சாதாரணன், தமிழனாக பிறந்த ஒரே காரணத்தால் சிங்கள் பெரும்பான்மை அரசின் கொடுமைகளுக்கு ஆளாக்கபடுவதை இந்த நாவல் விவரிக்கிறது. எளிய நடையில் ஒரு டைரிகுறிப்பு போல் நேர்கோட்டில் பயணித்து, நமக்கு பயங்கரத்தின் முகத்தை அடையாளம் காட்டுகிறது. பணத்தை ஒரு சிங்கள வீட்டு உரிமையாளனிடம் பறி கொடுத்த காரணத்தால் போலிஸில் புகார் கொடுக்க, அதுவே விணையாக, பயங்கரவாதி என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பில் சித்ரவதைகளுக்கு பிரச்சித்தி பெற்ற நாலாம் மாடிக்கு இழுத்து செல்லபடும் நாயகன், கைது செய்யபடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல்.

நாம் முன்பு பார்த்தது போல், இந்த நாவலில் எந்த அங்கதத்திற்க்கும் வேலையில்லை. ஒரு பயங்கரத்தை அதன் போக்கில் விவரித்து போவதிலேயே வாசகனுக்கு உணர்த்த வேண்டியதை, செவ்வன செய்து விடுகிறது இந்த நாவல். எந்த முறைமையும் இன்றி யார் வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு, அமைதியான குடும்ப வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகடிக்கபடலாம் என்கிற நடைமுறை யதார்த்தம் நாவலில் விவரிக்கபடும்போதுதான் அதன், தீவிரம் உறைக்கிறது.

இந்த நாயகனுக்கு, கொரில்லா, ம் போன்ற நாவல்களில் வரும் நாயகனை போன்று, வாழ்க்கையில் மிக பெரிய கொள்கைகளோ, உரிமை போராட்டங்களோ இல்லை. எந்த அரசியலும் இல்லை. சாதாரண குடும்பஸ்தனாக தனது மகனை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வைப்பதற்க்காக, ஒரு நல்ல வாடகை வீட்டில் வசிப்பதற்க்காக ஆசைபடுகிறான். பிறந்து வளர்ந்து, முப்பது வருடங்கள் உழைத்த ஒரு பூமியில் இந்த சாதாரண ஆசை கூட அவனுக்கு அவனது இனத்தின் காரணமாக மறுக்கபடுகிறது. 


சரி, நடைமுறை யதார்த்தத்தை சரியாக ஆவணபடுத்துவதில் வெற்றியடையகிறது இந்த நாவல். இது இலக்கியமாக ஆவது எதனால்? நாயகனின் தாய் வாழ்ந்த வாழ்வை விவரிப்பதிலும், அதன் நுண்ணிய சித்தரிப்புகளிலுமே இது இலக்கியமாக மிளிர்கிறது.இரண்டாயிரம் ஏக்கர் தோட்டத்திற்க்கு கங்காணியாக, பணத்தில் புரளும் நாயகனின் தந்தை, வெளவால், காளான் கறியுடன், கள்ளு குடிப்பதில் தொடங்கி, கோட்டு போட்டு கொண்டு சம்பள நாளில் பவனி வருவதை சித்தரிப்பது, கிருஷ்ணா கள்ளுக்கு பாளை கட்டுவது  என நுண்ணிய விவரிப்புகள்.  பாவற்காய் கசப்பில் வளர்ந்த புழு போன்ற உவமைகள், வீட்டு உரிமையாளரின் பேரம் என ஒரு சுவையான கதை சொல்லியாக ஜோசப் மிகவும் கவர்கிறார்.


கள்ளின் போதையில், சுருட்டு பற்ற வைக்க காகிதமில்லாது, சம்பள பணத்தின் நோட்டுகளை ஒவ்வொன்றாக உருவி தீயில் காண்பித்து ,பற்ற வைத்துகொள்கிறார். அதிகாரத்தின் ருசியில், குடை நிழலின் மமதையில், அளவுக்கு மீறி ஆடும் நாயகனின் தந்தை, ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்து பேசுகிறார். வாழ்க்கை முழுவதும் அடிகளையும் உதைகளையும் எந்த முணுமுணுப்புமின்றி தாங்கி வந்த தாய், பொங்கி எழுகிறாள். இருவருக்குமான உறவு முடிந்ததன் அடையாளமாக, இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டிலை எரிக்கிறாள். பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.அதிகாரத்தின் நுனியில் ஆடிய, தந்தை வாழ்வில் இறுதியில் அழிந்து இல்லாமலாகிறார். 


பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன், நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன், நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை, இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது.தெளிவத்தை ஜோசப்பின் மற்ற எழுத்துக்களை படிக்க ஆர்வமாகயிருக்கிறேன்.