Tuesday, December 25, 2012

டெல்லி பயங்கரமும், தினமணி தலையங்கமும்


பூண்டி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். தஞ்சை நோக்கி விரைந்து கொண்டிருந்த பேருந்தில், நிற்க கூட இடமில்லை. தொல்காப்பியர் சதுக்கம் அருகே வந்த போது, அந்த குரல் எழுந்தது. "கையை எடுறா, நாயே.." ஒரு தாவணி அணிந்த பெண் சீறினாள். பொறுக்க முடியாமல் சீறிவிட்டாளே  தவிர, உடல் முழுவதும் நடுங்குகிறது அவளுக்கு. அவள் அருகில் நிற்கும், அவளது தாய், "சும்மா இரும்மா" என்று தவிக்கிறாள். "நானும் பாத்துட்டே இருக்கேன், கண்ட இடத்திலே கை வைக்கிறான்மா"  என்று கூறியபடி கதறி அழுகிறாள், அந்தப்  பெண்தனது பெண்ணின் மானத்தை காக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, அந்த பைத்தியக்கார தாயார் தொடர்ந்து அந்த பெண்ணை பேச விடாமல் தடுக்குகிறார். அந்த பொறுக்கி தலை குனிந்தபடி, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தனது நண்பர்களுடன் பஸ்ஸில் இருந்து குதித்து வெளியேறுகிறான். பேருந்தில் இருக்கும் அனைவரும் தமக்கு சம்பந்தமில்லாத நிகழ்வு போல் அமைதி காக்குகிறார்கள்.  என்னருகே உட்கார்ந்திருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க, நாகரீகமாக அடையணிந்திருந்த அந்த நபர் "சரியா தடவியிருக்க மாட்டான்.." என்றான். இதை  சொன்ன போது, என்னை பார்த்து சிரித்தான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண், ஆறு பேர் கொண்ட கும்பலால்,  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறாள். வல்லுறவுடன் அந்த பெண்ணை விட்டுவிட விரும்பாத அந்த கும்பல், இரும்புத் தடியைக் கொண்டு அந்த பெண்ணின் யோனிக்குள் சொருகி குடலை கிழித்து பின்பு அவளை வெளியே தூக்கி வீசுகிறார்கள். இதைத்  தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பரையும் தடியால் தாக்கி வெளியே எறிகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடே பற்றி எரிகிறது.   நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த வெறி சம்பவத்தை பற்றி தலையங்கம் எழுதும் தினமணி  கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கிறது.
<பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.>

சரி, அந்த பெண் ஏதோ தானே வலிய  சென்று, இந்த துன்பத்தில் சிக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறதா?. அந்த பெண் செய்த கொலைபாதக செயல் தான் என்ன? மேலே படிப்போம். 

<துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை.>

எப்படி வன்மம் தெறிக்கிறது பாருங்கள்? <ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை.> உள்ளங்கை நெல்லிக்கனி போல்  ஆணாதிக்க சிந்தனை பப்பரக்கா, என பல் இளிக்கும் இந்த வரிகளை கூட புரிந்துக் கொள்ள முடியாதெனில் விவாதித்து மட்டும், இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியுமா என்ன?

ஒரு வயது வந்த பெண் படிக்க வந்த இடத்தில ஒரு ஆண் நண்பருடன் வெளியே செல்வது தவறா? தவறெனில் நாம் எந்த மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்? மேலும் தொடர்கிறார்,  அந்த தலையங்கத்தை எழுதிய தன்னிகரில்லா பண்பாட்டு காவலன்.

<இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?>

அரசு பேருந்திற்க்கு காத்திருக்கிறோம். வர நேரமாகிறது. அந்த வழியே செல்லும் ஒரு தனியார் பேருந்து நிறுத்தி, பாலம் செல்வதாக, உள்ளே இடமிருப்பதாக கூறினால்,  நாம் என்ன செய்வோம்? மேலும் முழுக்க கருப்பு கண்ணாடி கொண்டு மறைக்கப்பட்டிருக்கும் பேருந்தின் உள்ளே இருப்பவர்கள் யார் என்று மை போட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறதா  தினமணி? அவர்கள் அப்படியே வெளியே தெரிந்தாலும், நம்மை போல் அவர்களும் சக பயணிகள்தான் என்று தானே நினைக்க தோன்றும் ? மேலும் தன்னுடன் ஒரு ஆண் நண்பர் இருக்கும்போது என்ன ஆபத்து நேர்ந்து விட போகிறது என்று யோசித்தது ஒரு தவறா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஓரளவு கல்வியறிவு பெற்ற, கலாச்சாரம் வளம் மிகுந்த, பாதுகாப்பு உடைய நாடு என்று யோசித்ததுதான் அந்த பெண் செய்த ஒரே குற்றமா?


மேலும் தொடர்கிறார், 

<ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். >

தொடர்ந்து, அது அவர்களது விருப்பம் என்று சொல்லிக் கொண்டே, காழ்ப்பை உமிழ்கிறது, இந்த தலையங்கம்.  அட பாவிகளா ? ஒரு ஆணுடன், ஒரு பெண் பேசி சிரிப்பதும் தவறா, இந்த பாரதி வாழ்ந்த பூமியில் ? நெஞ்சு பொறுக்குதில்லையே..

<உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்..>

இதோ பூனை வெளியே வந்துவிட்டதா? அவ்வபோது பெண்கள் சிகரெட் குடிப்பது போலவும், டிஸ்கோத்தே அரங்கில் ஆடிக் கொண்டிருப்பது போலவும், உலக மகா யோக்கியர்கள், தினமலரில் போட்டோ எடுத்து  போடுவார்கள். "கெட்டு போன சென்னை", "காலம் மாறி போச்சு" என்ற நெஞ்சை அள்ளும்,    தலைப்புகளில். அவர்கள் கூற விரும்புவது, இதெல்லாம் செய்ய, ஆண்களுக்கு மட்டுமே லைசன்ஸ். பெண்கள் செய்தால் உலகம் அழிந்து விடும். பண்பாடு உருகி விடும். ஆண்கள் எந்த கேப்மாறித்தனமும் செய்யலாம். தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்ணுக்கு, கேவலமான குறுந்தகவல் அனுப்பலாம். யோக்கிய சிகாமணிகளுடன் சேர்ந்து, பாஷா பாருக்கு செல்லலாம். குடித்துவிட்டு கார் ஓட்டி,  பீச்சுக்கு சென்று சத்தமாக பாட்டு கேட்கலாம். வீட்டு பெண்கள் வெளியே வரலாமா? அடுக்குமா? யார் வீட்டு பெண்ணையோ, அநாகரீகமாக  இப்படி போட்டோ எடுத்து போட, எவன்  அவர்களுக்கு உரிமை கொடுத்தது? எந்த பெண்ணும் தன்னை எதிர்த்து வெளியே வந்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்தானே, தினமலர் தொடர்ந்து இந்த கேவலமான செயலை செய்து வருகிறது?

தினமலர் அந்துமணி கொண்டிருக்கும் விழுமியத்தையும்,  நிலைப்பாட்டையும் தானே இந்த தலையங்கத்தை எழுதிய பெருமகனாரும் கொண்டிருக்கிறார். அப்புறம் என்ன பொல்லாத நடுநிலை பத்திரிகை? ஒரு தந்தையோ, அண்ணனோ தனது வீட்டு பெண்ணிற்க்கு சொல்வதுதானே இதெல்லாம் என்கிறார்கள். அவர்கள் சொல்லலாம். அதை அந்த பெண் எதிர்க் கொள்வாள். ஒரு பத்திரிகையோ, அரசியல்வாதியோ, சமூதாயத்தின் கோபத்தை வேறு பக்கம் திசை திருப்பும் இந்த இழிவான செயலை, அதுவும் இந்த நேரத்தில்  செய்யவே  கூடாது. ஒரு பத்திரிகை எந்த நிலையிலும், ஆணாதிக்க சிந்தனையை உமிழக்கூடாது . இது மாதிரியான ஆபத்தான கருத்துகள்,  பெண்கள் பற்றிய பார்வையை மோசமாக வடிவமைக்கும். "அவன், சரியா தடவியிருக்க மாட்டான்" என்று சொன்னானே  ஒரு பொறுக்கி, அந்த பொறுக்கிக்கு, தார்மீக பலத்தை இது மாதிரியான  கருத்துகள்தான் கொடுக்கின்றன. எனவேதான், இதை வேரோடும் வேரடி மண்ணோடும் எதிர்க்கிறேன். 


இதில் ஒரு முரண்நகை என்னவென்றால் இந்த கொடுமையை செய்த அந்த கயவர்களில் ஒருவனும் இதே போன்ற ஒரு கருத்தைதான் அவனுக்கு தெரிந்த மொழியில் தெரிவித்தான். இரவு நேரத்தில் வெளியே சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தோம் என்றான். 



சமூதாயத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டிய பத்திரிக்கைகள், இப்படி திசை மாறி பயணிப்பதையே பேராபத்து என்று வெறுக்கிறேன்.  இது போன்ற நிகழ்வுகள் மிச்சமிருக்கும் இந்தியாவின் ஆன்மாவை தட்டி எழுப்ப வேண்டும். அதை விட்டு, பாதிக்கபடுபவர்களையே குறி வைத்து தாக்கும்  இந்த தலையங்கம் குற்றவாளிகளுக்கு, மறைமுகமாக குறைந்தபட்ச நியாயங்களை உருவாக்கி  அளிக்கும் என்ற பயத்தினாலேயே இதை எதிர்க்கிறேன். எந்த காரணத்தால், சின்மயி விவாகாரத்தில் இரண்டு பக்கம் இருக்கிறது என்பதை மறுத்தேனோ, அதே காரணம்தான்.

தினமணியில் வெறும் ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தலையங்கத்தையே புரிந்துக்கொள்ள முடியாதவர்கள், தொடர்ந்து தமது கருத்தில் விடாபிடியாக மல்லுக்கட்டுவதால், அவர்களை தெளிவித்து உய்விக்கும் பொருட்டு, இந்த பதிவு எழுத நேர்ந்தது.

Monday, December 24, 2012

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டிற்க்கான விருது, நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2007-ம் ஆண்டிற்க்கான விருது லட்சுமி ஹோம்ஸ்ரோம் என்ற மொழிபெயர்ப்பாளருக்கு வழங்கப்பட்டபோது, ஜெயமோகன் அதை கடுமையாக விமர்சித்து எழுதிய கடிதம் நினைவில் உள்ளது. கே.கணேஷ், ஜோர்ஜ் எல் ஹார்ட் போன்றோரின் இலக்கிய சாதனைகள் குறித்தும் எனக்கு தெரியவில்லை. இருப்பினும், சுந்தர ராமசாமி, கோவை ஞானி, அம்பை,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு போதுமான மதிப்பையும் இந்த விருது தக்கவைத்திருக்கிறது.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல்தான் நான் முதலில் படித்த அவரது நாவல். யதார்த்த நடையில், ஏழ்மை பின்னனியில் இருந்து படித்து பட்டம் பெற்று தனது சொந்த காலில் நிற்க விரும்பும் ஒருவன், பணக்கார மாமனாரிடம் மாட்டிக் கொண்டு தனது சுய கவுரவத்திற்க்காக அல்லாடும் கதையை அழகாக சொல்லியிருப்பார். பின்பு தங்கர்பச்சான் இந்த கதையை, சொல்ல மறந்த கதை என்று சினிமாவாக எடுத்தார். தமிழில், நாவலை மூலமாக கொண்டு எடுக்கபட்ட படங்களில் போதுமான அளவு, அந்த நாவலுக்கு நியாயம் செய்த முக்கியமான வெகு சில படங்களுள் ஒன்று, இது. எந்த சமரசமும் இன்றி, இந்த படத்தை எடுத்த தங்கர்பச்சான் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ராஜாவின் இசை கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்தது. பிரமிடு நடராஜன், சேரன் இருவருமே நன்றாக நடித்திருந்தனர்.  ஆனால், என்ன காரணத்தினாலோ, இந்த படம் நமது விமர்சகர்களால், சரியான முறையில் நிறுவபடவில்லை.  

பிறகு நாஞ்சில் எழுதிய இடலாக்குடி ராசா என்ற சிறுகதை தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று.  தோன்றும்போதெல்லாம் அந்த கதையை தேடி எடுத்து படிப்பேன். அந்த இடாலாக்குடி ராசாவின் விட்டோத்திதனமும், இந்த உலகத்தையே தனது சொந்தமாக கருதும் மனப்போக்கும், ஒவ்வொரு முறையும் தவறாமல் எனக்குள் மிகுந்த நெகிழ்வையும், அன்பையும் ஏற்படுத்தும்.

2011-ம் ஆண்டிற்க்கான  சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பும் முக்கிய சிறுகதைகளை உள்ளடக்கியதே.
அமி காணார்அமி காணார்(யாம் உண்போம்), வயது முதிர்ந்த வறியவர்களை காணும் கணந்தோறும் என் காதில் ஒலிக்கும் வார்த்தைகள் இவை.. மகனை குடும்பத்துடன் வறுமைக்கு பலி கொடுத்துவிட்டு, பசியின் கொடுமையில் பாபுராவிடம், நாத்ரே இரந்துண்ட போது, கூறிய மகத்தான வார்த்தைகள். நாத்ரேவின் மகனுக்கு குடும்பமே உலகம். நாத்ரேவிற்க்கோ உலகமே குடும்பம். சொல்லபோனால் பசியின் பெருந்துண்பத்தையும், ருசியின் இனிமையையும், நாஞ்சில் போல் எழுத்தில் வடித்த வேறு ஒருவர் இல்லை.

2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பின், தமிழக அரசு விழித்துக் கொண்டு, கலைமாமணி என்ற உலக சிறப்புமிக்க விருதை நாஞ்சில் நாடனுக்கு வழங்கியது. கலைமாமணி விருது விழாவின் போது சென்னையில் இருந்தேன். ஜெயகாந்தன், இளையராஜா கலந்துக் கொண்டு சிறப்பித்த அந்த நிகழ்ச்சியில், நாஞ்சிலாருடன் சேர்த்து, தமன்னா, அனுஷ்கா, ரோபோ சங்கர் போன்ற பெரும் சாதனையாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. தமன்னா, அனுஷ்கா இருவரும் கரகோஷம் முழங்க, விருது வாங்கி, கிழே வர புகைப்படம் எடுக்க, ஒரு கும்பல் முட்டி மோதியது. தமன்னா, கலைஞர் பொற்பாதம் பணிந்து, விருதை வாங்கிய கணத்தில், தாழ்ந்த தமிழகமே, தலை நிமிர்ந்தது. ரோபோ சங்கருக்காக வந்திருந்த கூட்டம், சங்கர் விருது வாங்க வந்த நொடியில் இருந்து, மேடையில் இருந்து இறங்கும் வரை கத்தி தீர்த்தது. விருது வழங்கிய கலைஞரே சற்று குழப்பமானார். கிரைம் கதை ராஜேஷ்குமாருக்கு (கோயமுத்தூரில்ருந்து டிரிங்..ட்ரிங்) கூட ஒரிரு கைத்தட்டல்கள் கிடைத்தன.



விழா முடிந்த தருணத்தில், நாஞ்சிலாரை அணுகி சாகித்ய அகாடமி விருதுக்கு வாழ்த்து தெரிவித்தேன். சற்று திகைத்து, பின்பு மலர்ந்து சிரித்தார். புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். உடனே, “எங்க நின்னு எடுத்துக்கலாம்? என்றார் சிநேக பாவத்துடன். அநேகமாக அன்று, அந்த சூழ்நிலையில், நாஞ்சில் நாடனுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.  டெல்லிக்கு விருது வாங்க போவது பற்றி மகிழ்வுடன் விளக்கினார். சிறிதோ, பெரிதோ,  விருதுகள் தரும் அங்கீகாரம் நிச்சயமாக கலைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று தோன்றுகிறது. இயல் விருது பெற்ற இந்த மண்ணின் மகத்தான கலைஞனுக்கு வாழ்த்துகள்.

Monday, December 17, 2012

ஒழிமுறி - திரையில் விரியும் காவியம்

ஒழிமுறி பார்த்தேன்.. திரையில் ஒரு கிளாசிக் நாவலை படித்தது போல் இருந்தது.  ஜெயமோகன், வசனம் எழுதும் எல்லா படங்களுக்கும், கதை, திரைக்கதையும் அவரே எழுதினால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மனித மனம் கூர்மையாக தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு போட்டுச் செல்லும் வேடங்களை, இதை விட அழகாக சொல்ல முடியாது. 



கேரளத்தில், பெண்களுக்கே சொத்துரிமை என்று ஒரு காலக்கட்டம் இருந்தது. அந்த உரிமையின் காரணமாக பெண்களே, ஆண், பெண் சமூக அடுக்கில் அதிக அதிகாரம் பெற்றவர்களாக இருந்தார்கள். அப்படி, ராணி போல் வாழும் காளிப்பிள்ளை(ஸ்வேதா மேனன்), தனது கணவன் சிவன்பிள்ளையை (லால்) ஒரு புழுவை போல் நடத்துகிறாள்.தந்தையிடம் பாசம் கொண்ட சிறுவன் தாணுப்பிள்ளை(லால்), இதை கண்டு கலங்குகிறான். ஒரு நாள், வேலைக்காரியிடம், சிவன்பிள்ளையின் வெற்றிலைப்பெட்டியை தூக்கி வெளியே வைக்க சொல்கிறாள், காளிப்பிள்ளை. அந்த நாள் முதல், வீட்டின் திண்ணையில், ஒரு நாய் போல் வாழ்ந்து மறைகிறார் சிவன் பிள்ளை. இதை போல் தனது வாழ்க்கையும் ஆகிவிட கூடாது என்று நினைக்கும் தாணுப்பிள்ளை, தனது மனைவி மீனாட்சியை (மல்லிகா) அடக்கி ஆள்கிறார். தொட்டதெற்க்கெல்லாம் அடித்து நொறுக்கிறார். தாய் காளிப்பிள்ளை, மகனால் கைவிடப்பட்டு அனதையாக சாலையில் விழுந்து இறக்கிறார். இதைக் கண்டு மனம் குமுறும் மகன் சரத்(ஆசிப் அலி) தனது தந்தையை வெறுக்கிறான். இப்படியாக ஒரு வட்டத்தில் வந்து முட்டி நிற்கிறது வாழ்க்கை.  

தனது மகன், தன்னை வெறுக்கிறான் என்பது காளிப்பிள்ளைக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஆனாலும், சாகும் கட்டத்தில், எல்லா தவறுக்கும் காரணம் தனது மருமகள்தான் என்று பழியை மீனாட்சியின் மீது போட்டு விலகுகிறாள், காளிபிள்ளை.  எல்லா தாயும்,  தன் மகனை நல்லவன் என்றும், தன் மருமகளால் தான் அவன் கெட்டுவிட்டான் என்றும் நம்புவதற்க்கு காரணம்,  உண்மையை சந்திக்கும் திராணி இல்லை    என்பது மட்டுமின்றி, தன்னுடைய வித்தில் எந்த தவறுமில்லை என்றுத் தன்னைதானே நம்ப வைத்துக் கொள்ள போட்டுக் கொள்ளும் நாடகமும் தான். அதேப் போல், மகாராணி போல் வாழ்ந்த தன்னுடைய தாய், சாலையில் அனதைப் போல் இறந்து கிடந்ததற்க்கு  காரணம் நாம் தான் என்பது நன்றாக தெரிந்திருந்தும், அந்த பழியை தூக்கி சுமக்க இயலாது, மனைவி மீது குற்றம் சுமத்தி  தன்னைத்தானே நல்லவன் என்று தாணுபிள்ளை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும், ஒரு வகையில் உயிர் வாழும் வேட்கையின் இயல்புதானோ?

முதலில், தன் தந்தை போல், மனைவியிடம் அடிமைப்பட்டு வாழாமல் இருக்கும் பொருட்டுதனது மனைவியை அடக்கி ஆள முரடன் வேடம், பின்பு, தந்தையின் மீது உள்ள பாசத்தால், தாயை பழிவாங்குவதாய் போட்டுக் கொள்ளும் வேடம், பிறகு எல்லா பழியையும் மனைவி மீது போட்டு விடுவதால் ஏற்படும் குற்ற உணர்வு, இறுதியில் மனைவியால் நிராகரிக்கப்படும் போது தன்னுடைய, இத்தனை நாள் வாழ்க்கையும் அர்த்தமில்லாதது என்று உணரும் தருணம் என்று தாணு பிள்ளையின் வாழ்வுதான் பரிதாபமானதாகவும், கொடியதாகவும் இருக்கிறது. 

மீனாட்சி அம்மாளின் வாழ்வு மிக துன்பகரமானது என்ற போதிலும், அவள் தம் மகன் பொருட்டு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்பவளாய், தன்னுடைய நிலையைத் தெளிவாக உணர்ந்திருப்பவாளாய் இருக்கும் காரணத்தினாலேயே, எல்லா நிகழ்வுகளையும், தன்னுடைய புரிதலால் தாண்டி செல்கிறாள். சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து  எதிர்நீச்சல் போடும் நபர்களை விட, சூழ்நிலையின் தீவிரத்தால், காட்டற்று வெள்ளத்தில் அடித்து சொல்லபடும் நாணலாய்அலைக்கழிக்க படும் நபர்களின் வாழ்வே துன்பகரமானது.

கொஞ்சம், கொஞ்சமாய் சரத் தனது தந்தையைப் புரிந்துக் கொள்ளும் வகையில் காட்சிகள் விரிவது இயற்க்கையாக இருக்கிறது. பாவனா, சரத் இருவரிடமும் ஏற்படும் காதல், அழகாக கவர்கிறது. அந்த காதல் குறித்து உணர்ந்துக் கொள்ளும் தாணுபிள்ளை, தனது மகனுக்கு  சொல்லும் அறிவுரை, வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் வாழ்ந்து பார்த்தவனின் வார்த்தைகள்.

ஜெயமோகன், ஏற்கனவே தனது வாழ்க்கை சம்பவங்களாய் எழுதியுள்ள பல நிகழ்வுகள் படத்தில் வருவதாலும், கதை நடக்கும் சூழலாலும், அடிக்கடி, சரத் கதாபாத்திரத்துடன் ஜெயமோகனை பொருத்தி பார்க்கிறது மனது.



லால், ஸ்வேதா மேனன், பாவனாஆசிப் அலிஇளவரசு என எல்லா பாத்திரங்களும் திறம்பட செய்துள்ளனர். மல்லிகா கணவனிடம் கஷ்டப்படும் போது காட்டும் நடிப்பு இயல்பானது. ஆனால்நீதிமன்ற காட்சிகளில்நடிப்பு போதாது. லாலின் பாத்திரத்தில், திலகன் செய்திருந்தால்,  படம் இன்னும் ஒரு உச்சத்தை தொட்டிருக்ககூடும்.

அழகாய் ஆடும் ஊஞ்சலை போல், முன்பின்னாய் நகரும் திரைக்கதை, நம்மை படத்துடன் கட்டிப் போடுகிறது.  மலையாளத்தை எழுபது சதவிகிதம் வரைதான் புரிந்துக் கொள்வேன் என்பதால், ஒரு சில வசனங்களை இழந்திருக்க கூடும்.  ஆனால் வசனங்கள் ஒவ்வொன்றும், கூர்மையாக தைக்கிறது. அவ்வளவு கச்சிதம். இசையும் மிக இயல்பாக படத்துடன் பொருந்தியுள்ளது.

இந்த படம், தமிழில் வெளிவரும் பட்சத்தில் மருமக்கள் வழி மான்மியமும், அதன் விளைவுகளும் தமிழ் ரசிகர்களுக்கு புரியுமா? என்று தெரியவில்லை. காளிபிள்ளையின் பாத்திரத்தை சொர்ணாக்கா என்று புரிந்துக்கொள்ளும் அபாயங்களும் உள்ளது. எப்படியிருப்பினும் இந்த படம் ஒரு காவியம். இதை, ஒரு முறை பார்த்து, அவ்வளவு எளிதாக கடந்துச் செல்ல யாராலும் இயலாது என்பதுதான் உண்மை.

Monday, November 12, 2012

நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்

நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 1986ல் பத்மராஜன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம். மலையாளத் திரைப்படங்கள் ஏன் திரும்ப திரும்ப புகழப்படுகின்றன? என்ற கேள்வியிருப்பின், இந்த படத்தை பார்க்க பரிந்துரைக்கிறேன்.

ஒரு அழகான மாலை பொழுதில், இந்த படத்தை பார்க்க நேரிட்டு எனது பால்ய கால நினைவுகளால் மீட்டப்பட்டேன். எந்த திடுக்கிடும் திருப்பங்களோ, அதீதமாய் உணர்வுகளை பொங்க வைக்கும் காட்சிகளோ இந்த படத்தில் இல்லை. தெளிந்த நீரோடை போல் அமைதியாக பயணிக்கும் இந்த காதல் கதையில், ஒரு கட்டத்தில், நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து கதையோடு ஒன்றியிருப்போம்.

நாயகன் சாலமன்(மோகன்லால்), பணக்கார சிரியன் கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவன். திராட்சை தோட்டம் பயிர் செய்து அந்த தோட்டத்திலேயே தனது பெரும்பாலான நேரத்தை செலவழிப்பவன். ஒரு நாள் ஊருக்கு திரும்பும்போது, பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்துள்ள நாயகி ஷோஃபியாவைப் (சாரி) பார்க்கிறான். காதல் அரும்புகிறது. எப்பவும் தோட்டத்திற்க்கு உடனடியாக திரும்பிவிடும் சாலமன், மேலும் சில நாட்கள் தனது தாயாருடனும், தம்பியுடனும் (வினித்)  சந்தோஷமாக நாட்களை கழிக்கிறான். இந்த பகுதியில், ஒரு அழகான குடும்பமும், அதனுடன்,  பக்கத்து வீட்டு பெண்களுக்கு ஏற்படும் நட்பும் அழகான காட்சிகளாய் விரிகின்றன.மோகன்லால் தனது காதலை சொல்லும் விதமும், அதை ஷோஃபியா ஏற்றுக்கொள்ளும் இடமும் ஒரு இனிய கவிதை.



இதற்க்கிடையில் சாலமனுக்கு ஷோஃபியை பற்றி தெரியவருகிறது. ஷோஃபியின் தாய்க்கு திருமணத்திற்க்கு முன் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் பிறந்தவள்தான் ஷோஃபி. ஷோஃபியின் தந்தை திருமணம் செய்ய மறுக்க, இவர்கள் இருவரையும் ஏற்கிறார் ஆண்டனி(திலகன்). தன் மூலம் பிறக்கும் இரண்டாவது பெண் குழந்தை மேல் பாசம் வைக்கும் ஆண்டனி, ஷோஃபியை வெறுக்கிறார். தான் செய்த தியாகத்தை அவ்வபோது நினைவுபடுத்தி, அதை ஒரு முதலீடாக கொண்டு, தனது மூத்த பெண் ஷோஃபியை தன்னுடன் வேலை பார்க்கும் தனது குடி நண்பனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்.மேலும், தனது மூத்த பெண் ஷோஃபியின் மேலேயே காம இச்சைக் கொள்கிறார் ஆண்டனி.   இதை எல்லாம் அறிந்துக் கொள்ளும் மோகன்லால், ஒரு முறை, ஷோஃபியை குடித்து விட்டு அடித்து நொறுக்கும் ஆண்டனியை தடுக்க, அவருடைய வீட்டிற்க்குள் நுழைய, ஆண்டனி மோகன்லாலை உதைத்து அவமானப்படுத்துகிறார்.

இவ்வளவு நாளும் தனக்கு அடங்கிப் போன தனது குடும்பமும், மகளும் திடிரென்று ஒருவன் வந்தவுடன் தன்னை அவமதிக்க துணிந்து விட்டார்கள் என்பதை எண்ணி ஆண்டனி துடிக்கிறார். வேறு ஒருவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு தான் தியாகம் செய்து வாழ்க்கை கொடுத்ததாய் நம்புகிறார். தனது எல்லா கீழ்மைகளையும், மற்றவர் மறந்திட, அது ஒன்று மட்டுமே போதும் என்று எண்ணுகிறார். அது மாதிரியான தியாகத்தை தான் மட்டுமே செய்ய முடியும் என்று நினைக்கிறார். ஷோஃபியின் தந்தை, தான் இல்லை, என்று ஷோஃபியை பெண் கேட்டு வரும் சாலமனின் தாயாரிடமும், சாலமனிடமும் தெரிவிக்கிறார். இதையும் மீறி ஷோஃபியை மணமுடிக்க கெளரவமிக்க, சாலமன் குடும்பம் , முன்வராது, என்று இறுமாப்புடன் வேலைக்கு கிளம்பி செல்கிறார். அதை போலவே, சாலமனின் தாயார் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், இதை எல்லாம் முன்பே ஷோஃபியின் மூலம் அறிந்திருந்த சாலமன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான். தொடரும் நிகழ்வுகளில், எப்படியும் ஷோஃபியை, சாலமன் திருமணம் செய்து கொள்வான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆண்டனி, கடும்கோபம் கொள்கிறார்.



ஒரு நாள் ஷோஃபியை பலவந்தபடுத்தி கற்பழித்து விடுகிறார். கோபத்தில் துடிக்கும் மோகன்லாலிடம், ”இனி, நீ அவளை கூட்டிக் கொண்டு போஎன்று ஏளனமாக சொல்கிறார். இதை சொல்லும் போது திலகன் வெளிப்படுத்தும் நடிப்பும், உடல்மொழியும், கிண்டல் கலந்த தொனியும், மேதமையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை அறிந்துக் கொள்ளும் சாலமனின் தாயார், இனி ஒருபோதும் தன்னால் திருமணத்திற்க்கு ஒத்துக் கொள்ள இயலாது என்று அறிவிக்கிறாள். சாலமன், இனி இங்கு வர மாட்டேன் என்று சொல்லி தனது தோட்டத்திற்க்கு ஜீப்பில் கிளம்பி செல்கிறான்.

அன்று இரவே, தனது லாரியில் கிளம்பி வந்து ஷோஃபியின் வீட்டருகே நிறுத்தி ஹாரன் அடிக்கிறான். ஷோஃபி வரவில்லை என்றவுடன், வீட்டின் கதவை தட்டுகிறான். கதவை திறக்கும் ஆண்டனி கத்தியுடன் பாய்கிறார். அவரை தட்டி கிழேத் தள்ளும் சாலமன், நான் வர மாட்டேன் என்று நினைத்தாயா என்று கேட்டுவிட்டு தனது ஷோஃபியுடன் லாரியில் ஏறி திராட்சை தோட்டத்திற்க்கு செல்கிறான். ஆண்டனியின் கீழ்மையை தனது எல்லையற்ற பேரன்பினால் விழ்த்தி சாய்க்கிறான் சாலமன். இதை ஒளிந்திருந்து காணும் சாலமனின் தாயார் மகிழ்வுடன் பெருமூச்சி விடுகிறார்.

இரு எதிரெதிரான பாத்திரப்படைப்பில் அற்பத்தனத்தையும், பேரன்பையும் மோத விட்டு பார்ப்பவர்களை நெகிழ்த்துகிறார் பத்மராஜன். இந்த பாத்திரங்களில் திலகனையும், மோகன்லாலையும் போல் பொருந்துகிற வேறு நடிகர்கள் இல்லை என்று தோன்றுகிறது.

ஜான்ஸன் மாஸ்டரின் இசை கனகச்சிதமாக படத்துடன் இணைந்து படத்தை வேறு ஒரு நிலைக்கு உயர்த்துகிறது. குறிப்பாக மோகன்லால் தனது காதலை சொல்லும் அந்த இடத்தில் வரும் பின்னனி இசை, அந்த காட்சியை எந்த காலத்திலும் மறக்க இயலாத ஒன்றாய், நம் மனதில் நிறுத்துகிறது.

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்த திரைப்படத்தை, இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பார்த்து அந்த பேரன்பிலும் பெருங்கருணையிலும் நெகிழ்கிறார். வாழ்வை உணர்ந்துக் கொள்ளும் உச்ச தருணங்கள் அல்லவா அவை?