போரும்
அமைதியும் நாவலின் ஆரம்பத்தில், அன்னா பாவ்லோனா என்ற மேட்டுகுடி பெண்மணி ஏற்பாடு செய்துள்ள
விருந்தில் விரும்பதகாத விருந்தாளியாக நுழைகிறான் பியர். முறைகேடாக பிறந்த மகன் என்பதால்
பிரபுக்கள் சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லாமல் வாழும் பியருக்கு, ஒரு கட்டத்தில்
தனது தந்தை மூலம் ஏராளமான சொத்துக்கள் கிடைக்கபெறுகிறது. அதே சமூகம் பியரை தங்கத்தட்டில்
வைத்து தாங்குகிறது.
இந்த
நாவல் முழுவதும் வரும் பியர், ஆன்மிகமான தேடல் உடையவனாக இருக்கிறான். பியரால், ஒரே
சமயத்தில், ஊதாரியாக சுற்றி வரும் அனடோலுடனும், மேலான நெறிகளை கொண்டவனான ஆண்ட்ருவுடனும்
நட்புப் பாராட்டமுடிகிறது.
ஆண்ட்ருவின்
தந்தை நிக்கலாஸ் போல்கன்ஸ்கி மாஸ்கோவைவிட்டு வெகுதூரம் தள்ளியுள்ள தனது மாளிகையில்
வசிக்கிறார். தனது காலத்தில் இருந்து வெகுவாக மாறிவிட்ட உலகின் மீது உள்ள வெறுப்பை
எல்லாம் தனது மகள் மேரியிடம் காட்டுகிறார்.
அவ்வாறு வெறுப்பை காட்டுவதினாலயே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்த குற்ற உணர்ச்சியை
போக்குவதற்க்காக மீண்டும் மேரியின் மீது வெறுப்பை கொட்டுகிறார். மாறிவிட்ட உலகின் அனைத்து
விஷயங்கள் மீதும் நிக்கலாஸுக்கு எள்ளல் இருக்கிறது. மனைவியை இழந்துவிட்ட அவருக்கு பெண்கள்
தேவையில்லாத சுமையாக தெரிகிறார்கள். அவர்களால் எதையும் சரியாக செய்யமுடியாது என்று
அலுத்துக் கொள்கிறார். அவருடன் வாழ்க்கை முழுவதும் வேலை பார்த்த உதவியாளன், தனது முதலாளியின்
கோச் வண்டியில் நகரத்திற்க்கு போகும் போது, ஓ.. இந்த பெண்கள் ! என்று தனதுமுதலாளியின்
பிம்பமாய், அலுத்துக் கொள்கிறான். உலகின் ஒழுங்கின்மை எந்த வகையிலும் தன்னை எதுவும்
பாதிக்காத வகையில், மகளுக்கு கணித வகுப்பு, கட்டிட வேலைகள் என்று தொடர்ந்து இயங்கி
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார் நிக்கலாஸ்.
நாட்டுப்பற்றும்,
கடமை உணர்வும் கொண்ட ஆண்ட்ரு, நெப்போலியனை தடுத்து நிறுத்துவதற்க்கான போரில் ஈடுபட,
கர்ப்பிணி மனைவியை தனது தந்தை வசம் ஒப்படைத்துவிட்டு, செல்கிறான். செயற்கரிய செயல்கள்
செய்த நெப்போலியனை பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்டவனாய் போரில் ஈடுபடும் ஆண்ட்ரு காயம்பட்டு
விழுகிறான். போரில் மடிந்துகிடக்கும் எண்ணற்றவர்கள் மத்தியில் காயத்துடன் விழுந்து
கிடக்கும் ஆண்ட்ரு, ஆகாயத்தை பார்க்கிறான். அங்குதான் எவ்வளவு அமைதி? என்று வியக்கிறான். யாரை தனது ஆதர்ஸ நாயகனாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஏங்கினானோ அந்த நெப்போலியன்
போர்களத்தில் விழுந்து கிடக்கும் தனது அருகே வந்து நிற்கும் போது, ஆண்ட்ரு ஆகாயத்தின்
பேரமைதியை வியந்தபடி கிடக்கிறான்.
ஆண்ட்ருவுக்கும்
நடாஷாவுக்கும் இடையிலான காதல் பல்வேறு பரிமாணங்களை கொண்டதாக இருக்கிறது. முதலில் இருவருக்குமிடையே
தீவிரமான காதல் உருவாகிறது. பிறகு, நடாஷாவின் மனமாற்றத்தால் உடைகிறது. அனடோலுடன் வெளியேறுவதற்க்கு முன்பே தடுத்து நிறுத்தபடுகிறாள்
நடாஷா. அனடோல் பற்றிய உண்மைகள் தெரியவர, மனம் உடைந்தவளாய் அறையைவிட்டு வெளியே வராமல்
இருக்கிறாள். போரிலிருந்து திரும்பிவரும் ஆண்ட்ரு நடாஷாவை ஏற்க மறுக்கிறான். அனடோல்
ராணுவத்தில் சேர்ந்துவிட்டதை அறிந்து, அவனை தண்டிக்க நினைக்கிறான் ஆண்ட்ரு. பிரஞ்ச்
படைகளுடனான போரில் படுகாயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கையில், பக்கத்து படுக்கையில்
இருக்கும் ஒருவனுக்கு கால் துண்டிக்கபடுகிறது. அரைகுறை மயக்கத்தில் அவனை உற்றுப் பார்க்கிறான்
ஆண்ட்ரு. அது வேறு யாருமல்ல அனடோல்தான். அனடோல் தண்டனை பெறுவது மாறா பிரபஞ்ச விதியான
அறத்தின் அடிப்படையில் என்றால், ஆண்ட்ருவும் அதே நிலையில் கிடப்பது எதன் அடிப்படையில்?
மரணபடுக்கையில்
கிடைக்கையில், மாஸ்கோவை விட்டு வெளியேறும் நடாஷா குடும்பத்தினரிடம் வந்து சேர்கிறான்
ஆண்ட்ரு. நடாஷா இரவு பகல் பாராது அவனுக்கு பணிவிடை செய்து அவனருகேயே கிடக்கிறாள். மீண்டும்
தனது காதலை கண்டுக்கொள்கிறான் ஆண்ட்ரு. மரணம் அடையும் தருவாயில் தனது நடாஷா, தனக்கு
திரும்ப கிடைத்த விசித்திரத்தை நினைத்தபடி படுக்கையில் கிடக்கிறான், ஆண்ட்ரு. மரணம்
ஒரு விடுதலை. சந்தித்தே ஆக வேண்டிய ஒரு எளிய நிகழ்வு என்று புரிந்துகொள்கிறான் ஆண்ட்ரு..
இப்போது எந்த குழப்பமுமின்றி, சாவை எதிர்நோக்கியபடி காத்திருக்கிறான்.
பியரின்
காதலோ, ஒரு எளிய தற்செயலாக மலர்கிறது. ஒரு விருந்தில் ஹெலனை சந்திக்கும் பியர் காமத்தால்
உந்தபடுகிறான். தனது வழக்கபடி எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறி, தன்னை சுற்றி உள்ளவர்களால்
உந்தித் தள்ளப்பட்டு, ஹெலனை திருமணம் செய்துக் கொள்கிறான். ஒரு சில நாட்களிலேயே தான்
விரும்பியது ஹெலனை அல்ல என்று புரிகிறது. அதையும் மீறி, அவனுடைய ஆன்மிக தேடல்களால்
அலைகழிக்கபடுகிறான் பியர். ஒரு ரகசிய மத குழுவில் இணைந்து கொஞ்ச காலம் செயல்படுகிறான்.
தன்னுடைய எஸ்டேட்டில் பண்ணையாட்களாக உள்ளவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று கல்விகூடங்கள்
ஏற்படுத்துகிறான். உண்மையில் கல்வியால் அவர்களுக்கு என்ன பயன் என்று குழம்புகிறான்.
ஒரு சில நாட்களில் அந்த குழுவில் இருந்து வெளியேறுகிறன்.
பியரின்
பாத்திரம் ஏறக்குறைய டால்ஸ்டாய்தான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். எதிலுமே அமைதியடையாமல்
அலைந்து திரியும் பியரின் மீட்சி, பிளாட்டேன் காரடேவ் மூலம் சாத்தியமாகிறது. எளிய குடியானவனான
பிளாட்டேன், சந்தர்ப்ப சூழ்நிலையால் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற நேர்கிறது. பிறகு பிரஞ்ச்
படையினரிடம் பிடிப்பட்டு முகாமில் வசிக்கிறான், பிளாட்டேன். பிரஞ்ச் படைகள் மாஸ்கோவை
கைப்பற்றிய பின்னரும் அங்கு இலக்கின்றி சுற்றி திரியும் பியரை, பிரஞ்ச் ராணுவம் கைது
செய்து அதே சிறையில் அடக்கிறது. பிளாட்டேன், வாழ்க்கை முழுவதும் கடும் உழைப்பையும்,
கொடுமையான தனிமையையும் கொண்டவனாக இருக்கிறான். தான் ராணுவத்துக்கு வந்தது மூலம் தனது
குடும்பம் நிம்மதியாக வாழ்வதை கண்டு, ஒரு எளிமையான விவசாயிக்கு எந்த விதத்திலும் பொருந்தாத,
ராணுவ பணிக்கே மீண்டும் திரும்புகிறான். அப்படி ராணுவத்துக்கு திரும்புகின்ற நாளில்,
பிளாட்டேனின் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் அழைத்து பிளாட்டுனின் காலில் விழ செய்கிறார்.
பிளாட்டேனுக்கு பிறந்த ஒரே பிள்ளையும் சிறு வயதில் இறந்துவிடுகிறது. ஆனால், அவனுக்கு
யார் மீதும், எதன் மீதும் எந்த குற்றச்சாட்டுமில்லை. வாழ்க்கையை சிறிய புல் போன்ற எளிமையுடன்,
உண்மையை மட்டும் துணையாக கொண்டு எதிர்கொள்கிறான். தனக்கு என்று எதையும் இறுக்கிவைத்துக் கொள்ளாத அவனுக்கு எந்த துன்பமுமில்லை. அவனுக்கு என எந்த நண்பர்களுமில்லை.
ஆனால் எதிர்படும் எல்லா மனிதர்களுடனும் அவனால் நட்பு பாராட்ட முடிகிறது, உதவ முடிகிறது.
முகாமில்
பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு இரவு பொழுதில் கதை பேசியும் பாடியும் பொழுதை
கழிக்கிறான் பிளாட்டேன். தனக்கு தெரிந்த பாடல்களை தனக்கு வருகின்ற ராகத்தில் பாடுகிறான்.
குற்றமே செய்யாமல், சிறையில் வாழ்நாள் முழுவதும் கழித்து இறுதியில் குற்றமற்றவன் என
தெரிந்து விடுதலை செய்தி வருகின்ற போது, சிறையிலேயே இறந்துவிடுகின்ற ஒரு அப்பாவி கைதியை
பற்றிய கதையை, திரும்ப திரும்ப சொல்கிறான். அந்த அப்பாவி
கைதியை அரசாங்கம் விடுவிக்கும் முன், இறைவன் விடுவித்துவிட்டான் என்று சொல்லி அமைதியில்
ஆழ்கிறான். இறப்பு என்பது விடுதலை மட்டுமே என்று பிளாட்டேன் சிந்திக்கிறான்.
மாஸ்கோவை
கைப்பற்றியப் பிறகு பிரஞ்சு படையினர், நீண்ட கால போரினால் மன உளைச்சல் மற்றும் களைப்பினால்
கட்டுபாட்டை இழக்கின்றார்கள். ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து பின்வாங்கும் தந்திரம் மூலம்
பிரஞ்சு படையை சோர்வடைய செய்கிறது. வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல், தொடரும்
இந்த நீண்டநெடியபோரினால், கடுஞ்மனசோர்வுக்கு ஆளாகும் பிரஞ்ச் படையினர் தம்மிடம் உள்ள
கைதிகளை வேறு இடத்திற்க்கு நடத்தி அழைத்து செல்கிறார்கள். நடக்க முடியாமல் பின் தங்குபவர்களை
நாயை சுடுவது போல் சுட்டுக் கொல்கின்றனர். பிளாட்டேன், இனி நடக்க விரும்பாது ஒரு மரத்தடியில்
அமர்கிறான். அவனிடம் வந்து பேசும் பிரஞ்ச் ராணுவத்தினன், துப்பாக்கியை எடுக்கிறான்.
அதை பார்க்கும் பியர், எந்த சிந்தனையுமின்றி முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்ட
பின் அவனிடம் வளரும் நாய் ஊளையடுகிறது. எதற்க்கு இப்படி இந்த முட்டாள் நாய் ஊளையடுகிறது
என்று எண்ணியபடி முன்செல்கிறான் பியர். மரணம் குறித்தல்ல, மரணம் குறித்தான பிளாட்டேனின்
கருத்துக்கு அஞ்சியே பியர் அந்த சாவை தெரிந்துக் கொள்ள விரும்பாது முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்று அவனுக்கு உரைக்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன் பெரிஸிய அழகியுடன், தனது பங்களாவின் வராந்தாவில் கூடலில் ஈடுபட்டது அவனுக்கு நினைவு வருகிறது. சாவின் மர்மத்துடன், காமத்தை இணைக்கிறார் தல்ஸ்தோய்.
பியரின் தேடல் முடிவுக்கு வருகிறது. பிளாட்டேனிடம் இருந்து, எல்லையில்லா அன்பை கற்கிறான் பியர். சக உயிர்களை நேசிக்க எந்த காரணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். மனிதர்களை கண்டவுடன் அவனுக்குள் அன்பும் பெருங்கருணையும் ஊற்றெடுக்கிறது. இந்த ஞானத்தை அடையாமல், தனது மனைவி ஹெலன் இறந்துவிட்டாளே என்று பரிதாபபடுகிறான். அதற்க்கு பிறகு அவனுக்கு எந்த துன்பமுமில்லை. பிளாட்டேன் தன்னை, பியருக்குள் விதைத்துவிட்டு, சென்றுவிடுகிறான்.
பிளாட்டேன் போன்ற மண்ணுடன் நேரடியான உறவில் இருக்கும் எளிய விவசாயிகளே, ஆன்மிக ஞானத்தை எளிதில் அடைவார்கள் என்று தல்ஸ்தோய் காட்டுகிறார்.
பியரின் தேடல் முடிவுக்கு வருகிறது. பிளாட்டேனிடம் இருந்து, எல்லையில்லா அன்பை கற்கிறான் பியர். சக உயிர்களை நேசிக்க எந்த காரணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். மனிதர்களை கண்டவுடன் அவனுக்குள் அன்பும் பெருங்கருணையும் ஊற்றெடுக்கிறது. இந்த ஞானத்தை அடையாமல், தனது மனைவி ஹெலன் இறந்துவிட்டாளே என்று பரிதாபபடுகிறான். அதற்க்கு பிறகு அவனுக்கு எந்த துன்பமுமில்லை. பிளாட்டேன் தன்னை, பியருக்குள் விதைத்துவிட்டு, சென்றுவிடுகிறான்.
பிளாட்டேன் போன்ற மண்ணுடன் நேரடியான உறவில் இருக்கும் எளிய விவசாயிகளே, ஆன்மிக ஞானத்தை எளிதில் அடைவார்கள் என்று தல்ஸ்தோய் காட்டுகிறார்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..