Sunday, March 20, 2016

சயந்தனின் ஆறாவடு

2009ம் வருடம் போர் உச்சத்தில் இருந்த போது, முல்லைதீவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி தப்பி பிழைப்பதற்க்காக 21 பேர் ஒரு சிறிய படகில் பயணம் செய்தார்கள். இலங்கை ராணுவம், இந்திய கடலோரகாவல் போன்றவற்றை எல்லாம் எப்படியோ மீறி பயணம் தொடர்ந்தது. ராமேஸ்வரம் அருகில் இருக்கிறதே என்ற எண்ணத்தில் உணவுக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. கடல் நடுவே வழி தவறியது. நாட்கணக்கில் பயணம் செய்தும் கரை தெரியவில்லை. ஒவ்வொருவராக செத்து விழுந்தனர். கடைசியில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் 11 பேர் குற்றுயிராக கரை ஒதுங்கினார்கள். தனது குடும்பத்தில் இரண்டு மகன்கள், மகள் மற்றும் கணவர் தன் கண்ணெதிரே பசியால் துடிதுடித்து செத்தனர் என்று கதறி அழுதார் மேரி என்ற பெண்மணி. இப்படி எத்தனையெத்தனை சம்பவங்கள்? இங்கு என்ன நடந்தது என்று கூற மேரி மட்டுமாவது உயிர் தப்பினார். படகு கவிழ்ந்து மொத்தமாக செத்தவர்கள் கடைசியாக செல்ல நினைத்தது எங்கே? சொல்ல நினைத்தது என்ன? ஆழ்கடலின் அடியே மெளனித்தவர்கள் எந்த நம்பிக்கையில் படகு ஏறினார்கள்?



எல்லா பயணங்களும், கரையின் அந்த பக்கம் மீதமிருக்கும் ஒரு துளி இரக்கத்தையும், கருணையையும் நம்பியே தொடங்கபடுகிறது. தமது சொந்தமண்ணில் எஞ்சியிருந்த கடைசி துளி மனிதமும் செத்துவிழுந்த பிறகு, சிறிய தோல்பேக்கில் தமது உடமைகளை எல்லாம் அடைத்து, கைவிட்ட கடவுள்களின் பிரசாதத்தை மடித்து ஒரு மூலையில் சுருட்டிக் கொண்டு, மறுகரை நோக்கி பயணித்தவர்கள் இவர்கள். இவை எல்லாம் எங்கோ ஒரு தூர தேசத்தில், எப்போதோ ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிகாலத்தில் நடந்தது அல்ல.நம் கண்ணெதிரே, நம் கைகள் தொட்டுவிடும் தூரத்தில், நடந்ததுதான். இவர்களின் வாழ்க்கையை/சாவை, எழுத்தில் ஆவணபடுத்தி இருக்கிறார் தமது முதல் நாவலான ஆறாவடு நாவலில் சயந்தன்.



1987ம் வருடம் தொடங்கி 2003 வரையிலான காலகட்டத்தை களமாக கொண்டு விரிகிறது நாவல். ராணுவ ஆக்ரமிப்பு, மக்கள் கைக்குழந்தைகளை தூக்கிகொண்டு ஒரு சிறிய சாக்குபையில் உடமைகளை அடக்கிகொண்டு புலிகளின் பகுதி நோக்கி இடப்பெயர்வு என இறுதிபோரில் என்ன நடந்ததோ அதுதான் அந்த காலக்கட்டத்திலும் நடக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை உடனடியாக தூக்கி செல்லமுடியாததால், நான்கு கிளாஸ் தண்ணீர், கொஞ்சம் உணவு போன்றவற்றை அருகில் வைத்துவிட்டு மனைவி மக்களை கொண்டு பாதுகாப்பாக விட்டுவிட்டு, திரும்ப வந்து அழைத்துக் கொள்ளலாம் என்று போகிறார் சிவராசன். திரும்புவதற்க்குள் ராணுவம் நுழைந்துவிடுகிறது. பலமாதங்கள் கழித்து திரும்ப செல்கையில், தண்ணீர் கிளாஸ்கள் காலியாக கிடக்கின்றன. அருகிலேயே மட்கிபோய் தாயின் சடலம்.

இத்தாலியை நோக்கி படகில் பயணிக்கும் முன்னாள் போராளி அமுதன் ஊடாக நாவல் சொல்லபடுகிறது. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரம் தேடி போராடுகையில், தனிமனித சுதந்திரம் என்னவாகும் என்பது சிக்கலான கேள்வி. சமாதானமான சூழலில், சகல வசதிகளுடன் வாழும் மக்களிடையே செயல்படும் தனிமனித சுதந்திரம், போர்சூழலில் பேணபடுமா? புலிகள் மீதான கேள்விகளை நேரு வாத்தியர் அமுதனிடம் தொடர்ந்து முன்வைக்கிறார். அவரே ஒரு பொதுவெளியில் புலிகளை பாராட்டுகிறார். ஒரு பெரிய அறத்துக்காக, சிறிய தவறுகள் மன்னிக்கபடலாமா? உண்மையில் எது பெரிய அறம்? சிறிய தவறுகள் என்பது அந்த தனிமனிதனின் வாழ்க்கையை பொறுத்தவரை உயிர் பிரச்சினையல்லவா? எதுவரை இந்த சமரசம் செல்லலாம்?

அதே படகில் பண்டார என்னும் சிங்களவனும் பயணிக்கிறான். கடுமையான வறுமையிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற ராணுவத்தில் சேர்ந்தவன். போர் சூழல் பயமளிக்க உயிரை காப்பாற்றிகொண்டு தப்பித்து செல்கிறான். இனவெறி எல்லாம் மூன்று வேளையும் உணவருந்த முடிந்தவர்களுக்கு தானே?

அதேவேளையில், உச்சக்கட்ட போர்சூழலில் வாழும்போதும் தமிழர்கள் சிலர் சாதியை விடுவதாய் இல்லை. புலிகள் தமது அதிகாரத்தை கொண்டு சாதிய ஆதிக்கவாதிகளை அடக்குவதை சயந்தன் அழுத்தமாக்க பதிவுசெய்கிறார். பெண்களை கேலி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கபடுகிறது. பெண்கள் இயக்கத்தில் இருக்கும்போது அனுபவித்த சுதந்திரம், இன்று போர் முடிந்த சூழலில் மறுக்கபடுகிறது. இவை எல்லாம் சயந்தன் மட்டுமின்றி, ஸ்ர்மிளா தமது உம்மத் நாவலில் காட்சிபடுத்துகிறார். புலிகளை எதிர்ப்பதையே, ஈழவிடுதலைக்கான செயற்பாடாய் கொண்டிருந்தவர்கள், இன்று புலிகள் இல்லாத சூழலில் செய்வதறியாது, பழையபெட்டியை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்பெயர் சூட்டவேண்டும் என்ற கட்டுபாட்டால் “சும்மா தேனீர் சாலை” நடத்தும் உரிமையாளர், சம்பளத்திற்க்கு வேலைபார்த்து எதிர்பாராமல் செத்துபோனவர்களுக்கு நாட்டுபற்றாளர் பட்டம் வழங்கபடல் என்று அங்கதத்துடன் ஆரம்பிக்கும் நாவல், பிறகு சீரியஸ் தொனிக்கு மாறிவிடுகிறது. இடப்பெயர்வால் அம்மன் கோவிலில் தங்கியிருக்கும் சுபத்திரையின் மகள் நடுஇரவில் வயசுக்கு வந்துவிட, அம்மனின் துணியை எடுத்து பயன்படுத்திகொள்கிறாள். அம்மனும் பெண்தானே புரிந்துகொள்வாள் என்று சுபத்திரை நினைக்கிறாள். இறந்துபோகும் பொடியனின் சடலத்தை கடலிலேயே வீசிவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். ஆனால், கடல் அலையால் படகு உடைந்து நொறுங்கிறது.



படகு முழுகி, அமுதனின் செயற்கை கால் மட்டும் எத்திரியா நாட்டில் கரை ஒதுங்கிறது. எத்ரியா நாட்டு விடுதலை போராட்டத்தில், தனது காலை இழந்த இத்ரிஸ் என்னும் கிழவன் அந்த செயற்கை காலை எடுத்து ஆனந்த்ததுடன் முத்தமிடுகிறான் என்று முடிக்கிற இடத்தில் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக சயந்தன் தன்னை நிறுவிகொள்கிறார்.

ஏறக்குறைய எரித்திய நாட்டு விடுதலை போரும் ஈழவிடுதலை போரும் ஒரே மாதிரியானவையே. அறுபது லட்சம் மக்கள் தொகை கொண்ட எரித்திய நாடு, எத்தியோப்பியா இரண்டாம் உலகபோரில் தமக்கு விசுவாசமாக இருந்ததற்காக பிரிட்டிஸ் அரசால் எத்தியோப்பியாவிற்க்கு சன்மானமாக அளிக்கபடுகிறது எரித்திய நாட்டுபோராளிகள் தனிநாடு கேட்டு போராடுகிறர்கள். முப்பது ஆண்டுகால போருக்கு பின், ஐக்கியநாட்டு பொதுவாக்கெடுப்பின் மூலம் 1993ம் ஆண்டு எரித்திய நாடு விடுதலை அடைகிறது. இத்தனைக்கும் எரித்திய 9 இனக்குழுக்களை கொண்ட சிறிய நாடு. பல்வேறு மொழிகள் பேசபடுகிறது. எத்தியோப்பியாவுடன் நிலத்தால் இணைக்கப்பட்டது. துப்பாக்கியை தோளில் சாய்த்தபடி, ஓ வழிபோக்கனே, உன் வழியில் எரித்திய தாயை பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுதருவேன் என்று பாடிய இத்ரிஸ், இப்போது அமுதனின் செயற்கை காலில் நின்றபடி நட்சத்திரங்களை பார்த்தவண்ணம் பாடிதிரியக்கூடும். .  







  

Friday, March 18, 2016

"ம்" - வலிந்து திணிக்கபடும் துரோகம்


ஈழத்தந்தை செல்வாநாயகம் சாத்வீகமான போராட்டங்களை கையிலெடுத்து அனைத்தும் தோல்வியைடந்து, இனி ஈழமக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று முடிவுரை எழுதி விடைபெறுகையில் அமிர்தலிங்கம் புதிய தலைவராக உருவெடுக்கிறார். இளைஞர்களால் கொண்டாடபடுகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், இளைஞர்கள் தமது கையை அறுத்து அவருக்கு ரத்ததிலகமிடுகிறார்கள். கூட்டத்தில் தமது வசீகரமிக்க உரையினால் கர்ஜிக்கிறார் அமிர்தலிங்கம். அப்படி ஈழத்துக்காக உணர்வூட்டிய அமிர்தலிங்கம் பிறகு வரலாற்றின் ஒரு தருணத்தில் துரோகியாக அடையாளம் காணப்பட்டு களையயெடுக்கபடுகிறார். இப்படிபட்ட விநோதங்கள் நிரம்பியதுதான் ஈழப்போராட்ட வரலாறு.



கிறித்துவதுறவியாவதற்க்காக படித்துக்கொண்டிருக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன், 1981வருடம் யாழ்நூலகம் சிங்கள் டிஜிபி தலைமையில் எரிக்கப்படுகையில், மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத்தில் உள்ள ரசாயனங்களை கத்திமுனையில் கொள்ளையடித்து ஈழப்போராட்டத்தில் இணைகிறான்.காவல் நிலையத்தில் குண்டு வீச முற்ப்பட்டு தோல்வியடைகிறான். பேரினவாதம் ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் நாசமாக்கிகொண்டிருந்த அதே வேளையில்தான், வெள்ளாளர்கள், பள்ளர்களை அடக்கியாண்டுகொண்டிருந்தார்கள். சாதிகொடுமைக்கு எதிராக போராடபோகும் நேசகுமாரன் காவல்துறையிடம் பிடிபடுகிறான்.

ஒருபக்கம் சிங்களபேரினவாதம். எந்தவரைமுறையுமற்ற சித்ரவதைகள், கொலைகள், காவல்துறை அடக்குமுறைகள்.மறுபக்கம் தமிழ்இயக்கங்கள் இடையேயான பிரச்சினைகள், பழிவாங்குதல்கள் இதனூடாக அலைபாயும் ஒருவன் எப்படி தன்னை தக்கவைத்துகொள்கிறான் என்று சொல்லமுற்ப்பட்டிருக்கிறார் ஷோபா சக்தி.

ஈழப்போராட்டங்கள் குறித்து எழுதப்பட்ட புதினங்கள் அளவில் மிககுறைவே. இன்னும் எழுதபடாத மக்களின் பாடுகள் ஏராளம். ஆனால், தனது மற்றநாவல்களை போலவே இதிலும் ஷோபா சக்தி எழுதமுற்பட்டிருப்பது போரினுடாக அலைகழிக்கப்படும் தனிமனிதனின் அகசிக்கல்களையே.

காதுதுவாரத்தில் பென்சிலை நிறுத்தி சுத்தியால் அடித்து உள்ளே இறுக்கி உண்மையை வரவழைக்கும் சிங்கள காவல் அதிகாரி உடுகம் பொல, பிடிபட்டவனின் இயக்க பேரை கேட்டு குழப்பம் அடைகிறார். விடுதலைக்காக போராடுவது எல்லாம் இருக்கட்டும். முதலில் இயக்க பேரை ஒழுங்காக சொல். அது ரெலோ தானே (TELO) என்கிறார். இல்லை சேர், றெலோ என்கிறார் கைதி. உண்மையில் RELO என்று ஒரு இயக்கம் இருந்ததை அவர் அறியவில்லை.  கள் குடித்ததற்காக தனிமனிதர்கள் மன்னிக்கலாம், அமைப்பு மன்னிக்ககூடாது அல்லவா தோழர் என்று கேட்டு பெல்ட்டால் அடிக்கும் நேசகுமாரன், அங்கேயாவது பெரிய அதிகாரிகள் மட்டும்தான் அடித்தார்கள், இங்கே வர்றவன், போகிறவன் எல்லாம் அடிக்கிறான். இதுதான் அதிகார பரவலாக்குதலா என்று கேட்கும் பக்கிரி என முழுக்க முழுக்க வலியாலும், ரத்தத்தாலும் நிரம்பிய பக்கங்களில் தனது பகடிகள் மூலம் இன்னொரு பரிணாமத்தை அளிக்கிறார். இந்த கூர்மையான கிண்டல் ஷோபாசக்திக்கு எளிதாக கைவருகிறது. சொந்தமண்ணில் இருந்து பிரிந்து பலவருடம் பல இன்னல்களுக்கிடையே ஐரோப்பிய தேசத்தில் தஞ்சம் புகுந்து கிடைத்த அனுபவங்கள், அவருக்கு எல்லாவற்றையும் அங்கதத்துடன் பார்க்கும் பார்வையை அளித்திருக்கிறது.

83 கலவரம், வெலிகடா சிறைச்சாலை படுகொலை, மட்டகளப்பு படுகொலை, கந்தன்கருணை படுகொலை என எல்லா சம்பவங்களிலும் நேசகுமாரன் இருக்கிறான். திரும்ப திரும்ப துரோகத்தால் மட்டும் தப்பி பிழைக்கிறான். போலிசிடம் அடிவாங்கும்போதும், கொள்கைக்காக என இறுமாப்புடன் கிடக்கும் அவன், ஜட்டி கிழிக்கப்படும் கணத்தில் ப்ளிஸ் சேர் என்று கெஞ்சி நிலைமாறும் கணம், அதிகாரத்தின் வலிமை மிகுந்த கைகளின் முன்பு, குறைந்தபட்ச சுயமரியாதை கொண்ட எவனும் நிலைகுலைவான் என்பதை நிறுவுகிறது. ஆனால், அதற்கு பின்பு அந்த பாத்திரத்திடம் ஏற்படும் மாற்றங்கள் எந்த தர்க்கத்துக்கும் உட்படாதவை. மனிதமனம் உச்சக்கட்ட நெருக்குதலில் எப்படி செய்லாற்றும் என்பதை பகுத்தறியமுடியாதுதான். ஆனால் இங்கே நேசகுமாரனிடம் ஷோபா சக்தி துரோகங்களை வலிந்து திணிக்கிறார். கண்ணெதிரே கலைசெல்வன் கொல்லபடும்போதும், கைக்குழந்தையின் தாய் துப்பாக்கிகுண்டை ஏற்று விழும்போதும், நேசகுமாரன் அதை எதிர்கொள்ளும்விதம் குறித்து எந்த விவரிப்புமில்லை. சம்பவங்களை மட்டும் சொல்லிசெல்லும் பாணியைதான் ஷோபா சக்தி கடைப்பிடிக்கிறார் எனினும், இதனாலயே நேசக்குமாரனின் பாத்திரம் பிளாஸ்டிக் வார்ப்பு போல் எந்த தாக்கத்தையும் நம்மிடையே ஏற்படுத்தாது விழுகிறது.




மனிதமனதின் இருண்மையை சொல்வது சரி. ஆனால் அந்த இருண்மையின் ஊடாக நாவலாசிரியன் சென்றடையும் இடம் எது என்பது முக்கியம். அப்படி அந்த பயணம் அமையவில்லையெனில் இது வெறும் சம்பவங்களின் தொகுப்பாக, இப்படி இவன் எதிர்வினையாற்றினான் என்பதோடு முடியும் ஒரு கதையாக மட்டுமே இருக்கும். அதற்கு மேல் இந்த நாவல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளபட எந்த தரிசனமும் இதில் இல்லை. இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு, கண்ணெதிரே நடக்கும் கொலைகள், செய்யும் துரோகங்கள், பல்வேறு ரத்தகறை படிந்த சம்பவங்கள் வழியே பயணிக்கும் ஒருவன் சென்றடையும் இடம், அடையும் தரிசனம் என்று ஒன்று இருக்குமில்லையா? அப்படி எதுவும் இதில் இல்லை. இதுவே இந்த நாவல் இலக்கிய ரீதியாக தன்னை நிறுவிகொள்ளாமல் தோற்கும் இடம். எல்லாவற்றுக்கும் மேல் அவன் பக்கிரிக்கு செய்யும் துரோகம், நிறமிக்கு இழைக்கும் படுபாதகம் போன்றவை வலிந்து திணிக்கபடும் பாவனையான துரோகங்களே. அதில் எந்த உண்மையுமில்லை. நிறமியின் பகுதி வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்க்காக எழுதப்பட்ட ஒன்றாக துருத்திக் கொண்டு நிற்கிறது.  ஃப்க்கிங் வெபன்ஸ் என்று துப்பாக்கி முனையை சலிப்புடன் தள்ளும் பக்கிரியின் கதாபாத்திரத்துக்கு செய்த நியாயத்தின் ஒரு பகுதியை கூட நாவலின் முக்கிய பாத்திரத்துக்கு செய்யாததால், உண்மைதன்மையின்றி படைப்பு தள்ளாடுகிறது.

ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக, தனது கூர்மையான பகடிகள் மூலம், வரலாற்று அபத்தங்களை தனது தனித்துவ நடையில் எழுதி ஈர்க்கும் ஷோபா சக்தி, ஒரு நாவலாசிரியனாக இந்த நாவலில் செல்லும் தூரம் குறைவே.