Friday, April 30, 2021

இசூமியின் நறுமணம் - விமர்சனம் - எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்

 ஜெயமோகனின் தளத்தில் வெளியான ‘மடத்து வீடு’ சிறுகதையே ரா.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தியது. அந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டிருந்த சூழலும், மடத்து வீட்டுப் பெண்களின் குணாம்சங்களை விவரித்திருந்த விதமும், உடல் முடங்கிப் போன நிலையிலும் சுடரணையாத காமத்தின் உந்துதலை தவிர்க்க நினையாத அப்பாவின் கதாபாத்திரமும் நல்லதொரு சிறுகதையென அந்தக் கதையை நினைவில் நிற்கச் செய்திருந்தன.

சில வருடங்களுக்குப் பிறகு ‘இசூமியின் நறுமணம்’ வெளியானது. கேளிக்கையான மனநிலையில் காமத்தை ஒரு கொண்டாட்டமாய் வெளிப்படுத்தும் மிதப்பான சூழலில் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் ஒரு பெண்ணிடம் உணர்ந்த வாசனையை காமத்தைத் தாண்டிய ஒரு அபாரமான அனுபவமாய் முன்வைக்கிற மிக நுட்பமான, ஆழமான சிறுகதை. பெண்களை போகத்துக்குரிய எதிர் பாலினமாக அணுகும் உயிர் இயல்பை ஒவ்வொரு ஆணும் கடந்து வர நேரிடும் தருணங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு சந்தர்ப்பங்களாய் அனுபவங்களாய் அமையும். பொதுமைப்படுத்துவது கடினம். அப்படியொரு தெளிவு மனத்தில் ஏற்படும்போது, சமயங்களில் அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம், உடலிச்சை அடங்கி தந்தைமை மேலெழுந்து பெண்கள் அனைவரையும் மகள்களாக உணரும் பார்வையைத் தரும். அதுவே இன்னும் மேலான நிலையில் பெற்றவளுக்கு நிகரானவர்களாய் அவர்களை நிறுத்திக் காட்டும். இசூமியின் நறுமணம் கதையில் கோபயாஷி சான் எட்டும் உச்சம் இத்தகையதுதான். உணர்வுநிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தை எழுத்தில் கொண்டுவருவது சவாலான ஒன்று. ஆனால், காமத்தின் பல்வேறு மனப்பாங்குகளை களிப்பும் கொண்டாட்டமுமான உரையாடல்களின் வழியாக நகர்த்திச் சென்று அதன் எல்லையில் கோபயாஷியின் கண்டுணர்தலாக நிறுத்த முடிந்திருக்கிறது. போனி டெயில் பரிசாரகி இந்தக் கதையின் துணை கதாபாத்திரமாக இருந்தபோதும் இப்படியொரு உச்சத்தை சாத்தியப்படுத்தும் சாட்சியாக சித்தரித்திருப்பது கதையின் அழுத்தத்தை மேலும் கூட்டுகிறது.

‘இசூமியின் நறுமணம்’ போன்றே இன்னும் சில கதைகளில் ஜப்பானின் பின்னணி ஊடுபாவாக அமைந்திருக்கிறது. மனித உறவுகளுக்கேயுரிய குணாம்சங்களான சிடுக்குகள், அக மோதல்கள், காமம், துரோகம் போன்றவை எல்லா நிலங்களுக்கும் பொதுவானவை. அவற்றுடன் அந்தந்த நிலத்தின் கலாச்சார அடையாளங்களையும் நுட்பங்களையும் சேர்க்கும்போது அந்தக் கதைகளுக்கு தனித்துவம் கூடிவிடுவதைத்தான் ‘தானிவத்தாரி’, ‘கனவுகளில் தொடர்பவள்’, ‘மயக்குறு மக்கள்’, ‘சிடியா கிராஸிங்’ ஆகிய கதைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அம்சத்தை துலக்கிக் காட்டவென ‘மலரினும் மெல்லிது காமம்’, ‘தானிவத்தாரி’ ஆகிய இரண்டு கதைகளைச் சொல்லலாம். ஆண் பெண் உறவில் எழும் தடுமாற்றமும் விளைவும்தான் இரண்டு கதைகளிலுமே மையம். தமிழகச் சூழலில் சொல்லப்பட்டிருக்கும் ‘மலரினும் மெல்லிது காமம்’ கதையில் ‘தெரிந்த மனிதன் என்ன தீமையை செய்துவிட முடியும்?’ என்ற வாக்கியமே ஜப்பானின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள ‘தானிவத்தாரி’ கதையில் ‘பள்ளத்தாக்கைக் கடக்க துணைவரும் பாட’லாகச் சொல்லப்பட்டுள்ளது. சக மனிதனின் மீது இன்னொருவன் கொள்ளும் நம்பிக்கை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிதறடிக்கப்படும்போதுகூட முற்றிலும் அவன் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை; அடுத்தவர் மீது அந்தக் கசப்பைப் பொருத்திப் பார்ப்பதுமில்லை என்பதையே இரண்டு கதைகளும் வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றன.

‘அனுபவ பாத்தியம்’ கதையில், மன்னார்குடியில் குத்தகை நிலத்தைத் திருப்பித் தர மறுப்பவர்களின் மனநிலையும் ‘நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்’ கதையில் கிகுச்சி சானின் மீது குற்றம் சாட்டும் ஜீவானந்தத்தின் மனோபாவமும் அடிப்படையில் ஒன்றுதான்.

‘செர்ரி பிளாசம்’, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ இரண்டும் அபத்தமான புதிர் கணங்களில் மையம் கொண்டவை. திட்டமிடல்கள் அனைத்தையும் நொடியில் ஒன்றுமில்லாமல் செய்கிற வல்லமைகொண்ட மரணமே இரண்டிலும் கையாளப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான பற்றுதலும் உறவுகளும் அர்த்தமற்றவையோ என்று மனம் சோர்வுறும்போது தக்கயாமாவின் உச்சிப்பகுதியில் ஒரு பழைய மரவீட்டின் அருகில் ககி மரத்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கும் கிழவரையும், அவர் நிற்கிற ஏணியைப் பிடித்துக்கொண்டிருக்கிற கிழவியையும் காட்டுகிறார் செந்தில்குமார். நல்ல அனுபவத்தை தரும் சிறுகதை இதற்கு மேல் எதையும் சொல்லாது. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ கதையும் மேலதிகமாக எதையும் சொல்லவில்லை.

காஞ்சி எழுத்துகள், சகுரா மலர்கள், கிமோனா, சாமுராய்கள், சிம்பாசி ரயில் சந்திப்பு, விதவிதமான பானங்கள், உணவுகள் என ஜப்பானுக்கேயுரிய அடையாளங்கள் கதையில் தேவையான அளவுக்கு மிகப் பொருத்தமான இடங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்.

0

இசூமியின் நறுமணம், ரா.செந்தில்குமார்

யாவரும் பப்ளிஷர்ஸ் - ஜனவரி 2021

Saturday, April 17, 2021

இசூமியின் நறுமணம் - வாசிப்பு அனுபவம் - எழுத்தாளர் ராதா கிருஷ்ணன்

 

இசூமியின் நறுமணம் சிறுகதை நூலை தொகுத்து கொள்ள வசதியாக இரண்டாக பகுத்து கொள்கிறேன்.  முதலில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள். 


இந்த தொகுதியில் தமிழ் நிலத்தில் நிகழும் கதைகள் என 4 உள்ளன,  அதில் மூன்று பெரிய குடும்பங்களின் வீழ்ச்சிகளை, அதையொட்டிய மனநிலைகளை பேசும் கதைகள்.  இந்த காலகட்டத்தின் இக்கதைகளில் வரும் குடும்பங்களின் வரலாற்று ஆவணங்கள் என கூட இந்த சிறுகதைகள் சொல்லமுடியும், கூடவே இந்த நிலத்தில் இருந்த சமூகங்களில் நிகழ்ந்த  மாற்றங்களையும் சொல்லி செல்கிறது,  முதல் நோக்கில் இந்த விதத்திலேயே இந்த சிறுகதைகளை முக்கியத்துவம் அமைகிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக இந்த நான்கில் ஒன்றான "அறமென படுவது யாதென கேட்பின்" எனும் சிறுகதை, இதில் பெரிய குடும்பமாக இருந்து வீழும் குடும்பமாக பிள்ளை சமூகத்தை சேர்ந்த நவநீதம் பிள்ளை வருகிறார்,  சாதாரண நிலையில் இருந்து, அதாவது பிள்ளையிடம் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்து கடைசியில் பிள்ளையின் வீட்டையே ஜப்தி செய்யும் ஒருவராக சாமிநாத முனையரியராக (கள்ளர் சமூகம் ) வருகிறார்.  பிள்ளை எவ்வாறு வீழ்கிறார், முனையதிரியர் எவ்வாறு மேலே எழுகிறார் என்பதெல்லாம் இந்த சிறுகதை படுசுவாரஸ்யமாக சொல்லிச்செல்கிறது, அதன் வழியாக இந்த கதை மாந்தர்களின் குணநலன்களையும். இது ஆவணம் என்பதை தாண்டி ஸ்வாரஸ்யமான கதை என்பதை, தாண்டி, பாத்திரங்களின் குணங்களை அழகாக காட்டுவதை தாண்டி எவ்வகையில் இலக்கியமாகிறது என்றால் இந்த கதை மனித மனதில் கசடு புகுந்தால் உருவாக்கும் தாக்கங்களை சொல்கிறது என்பதால்தான்.  இந்த கதை தலைப்புதான் அதுவும்.  மேல் விளக்கத்திற்காக இந்த பாடலையும் அதன் அர்த்ததையும் காப்பி பேஸ்ட் செய்கிறேன். //அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்.’

பிறர்க்கென உதவும் பெருமனம் யாருக்கு வரும்? மனத்துக்கண் மாசில்லாதவனுக்கே வரும் என்க. மனத்துக் கண் மாசு புகுந்துவிட்டால் அங்குப் பொறாமைப்பேய் முதற்கண் குடிபுகும். ஆசையெனும் அரக்கன் வாழ்வான்; வெகுளி எனும் வேண்டாத பண்பு வீறிடும்; இன்னாச் சொல் இனியதோர் இடம்பெறும். என்வேதான் மனத்துக் கண் மாசற்றுத் துலங்கவேண்டும்; அஃதே அறம் என் கிறார் வள்ளுவர்.//

இதில் சாமியாத முனையதிரியர் மனதில் இருக்கும் மாசு அவரை எவ்வளவு பாவத்தின் சம்பளங்கள் வாங்கி கொண்டாலும் கடைசிவரை தூய்மை அடையாமல் தடுக்குகிறது,  கருணையோ,  நன்மையை செய்யும் மனமோ இல்லாமல் ஆக்கி விடுகிறது.  ஒரு  நல்ல இலக்கியம் எதை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை சொல்வதை அது நிகழ்த்தும் மாயத்தை காட்டி புரிய வைக்கும், இந்த கதை அதை நிகழ்த்துகிறது. 

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் இன்னொரு உலகம் என்பது ஆண் பெண் உறவு, அது நிகழ்த்தும் மாயங்கள்,  இடர்கள்,  த்ரோகங்கள் முக்கியமாக கைவிடல்கள், அது உருவாக்கும் நிராதரவு நிலைகள்.  இதிலிருக்கும் பல கதைகள் இதை மையமாக கொண்டவைதான். இதை அடித்தளமாக கொண்டு வாழ்வில் நிகழும் நம்ப முடியாத புதிர்களையும்,  அது அளிக்கும் ஆச்சிர்யங்களையும் சொல்கின்றன.  உதாரணமாக செர்ரி பிளாசம் கதை,  அதில் வரும் நாயகிக்கு ஜப்பான் மீது கட்டற்ற பிரியம், ஈர்ப்பு இருக்கிறது,  அது ஒருவகையில் முன்குறிப்புணர்த்தலாக கதையில் வருகிறது, ஏனெனில் வாழ்வில் வெறும் மூன்றுநான்கு  நாள் மட்டுமே தங்கும் அங்கு தங்கும் அவள் தன் வாழ்வின் முக்கியமான ஒன்றை இழக்கிறாள், உண்மையில் இழப்பதற்காகவே அங்கு வருகிறாள் ! அந்நிலம் மீதான ஈர்ப்பெல்லாம் இதில் வந்து முடியவா என்பதை காணும் போது வாழ்வின் மர்மம் மீது மிகுந்த திகைப்பு உருகாகிறது. இந்த சிறுகதை இதை தாண்டியும் பல இழைகள் கொண்ட கதை,  குடி உருவாக்கும் சிக்கலை தீவிரமாக சொல்கிறது,  அதை விட குடும்ப உறவில் போன பிறகு தனது உடல்நலன் தன் குடும்பத்தையும் உள்ளடக்கியது எனும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் பொறுப்பின்மையின் விளைவுகளையும் பேசுகிறது,  இதை தாண்டி இந்த கதையில் இன்னொரு மனித மனம் எடுக்கும் வடிவம் பற்றிய குறிப்பு,  அவள் கணவன் இறந்த அந்த மூன்று நாட்கள் அழாதது.  இக்கதைக்கு சற்று இணையான சூழலை நான் நேரில் பார்த்திருக்கிறேன், என் நண்பன் தன் மனைவியுடன் கர்நாடகாவில் இருந்து ரயிலில் வரும் வழியில் உடல் கோளாறினால் இறந்தான்,  இறந்த கணவனை கொண்டு கோவை வந்திறங்கினாள் அவள் மனைவி,  நான் அவர்களை பார்த்தது பிறகு வீட்டில் நண்பன் அலங்கரிக்க பட்டு சடலமாக,  அருகில் அவள் அவனையே பார்த்தபடி அழாமல் இருந்து கொண்டிருந்தாள், அவள் அழாதது எனக்கு, அங்கிருந்தவர்களுக்கு பெரிய பதபதைப்பை அளித்தது, இந்த சிறுகதை இந்நிகழ்வை ஞாபக படுத்தியது,  மனம் ஏன் அப்படி ஒரு நிலை எடுத்து அழாமல் தடுக்க வைக்கிறது என்பதை யோசிக்கும் போது எனக்கு புதிராக இருக்கிறது. 

எனக்கு மிக பிடித்த இன்னொரு கதை "தானிவத்தாரி ".  ஒரு தவறு, அதனால் தன் வாழ்வு சூன்யமானதை சொல்லும் பெண், இன்னொரு இயற்கையின் உலகில் அந்த தவறை இனிமையான அனுபவமாக காண்கிறாள். இந்த சரிதவறை தாண்டியை சமன்தான் இந்த சிறுகதையை சிறந்த ஒன்றாக மாற்றுவதாக எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக இணையை தேடி கொள்ளும், அதற்காக கலைஞனாக மாறும் அந்த உகியிசு குருவி இந்த சிறுகதைக்கு இந்த சிறுகதையில் வரும் நாடோடியான சிமுராவிற்கு அழகான உவமானம் ! ஒரு நல்ல கதை ஒருவரின் பல மனநிலைகளை,  மனநிலை வேறுபாடுகளை முன்வைக்கும்,  இந்த கதையில் நாயகி துயரத்தை வெளிப்படுத்துகிறாள்,  இன்னொரு இடத்தில் அதை மறந்து ஒரு பெண்ணாக (பெண்மன விருப்பங்கள் ) சிமுராவை ரசிக்கவும் செய்கிறாள்.  ஒன்றிற்காக இன்னொன்றை இழக்க விரும்பாத மனம் ! ஒரு இடத்தை தன் அலைபாயும் மனதை வெறுக்கிறாள், இன்னொரு இடத்தில் ரசிக்கிறாள்.  கதையில் அலைபாயும் மனம் வார்த்தை வரும் இடம் கதையின் திருப்புமுனை இடம், இது கதையில் அழகாக காந்திருக்கிறது,  உள்ளே அழகாக ஜப்பானிய மொழி இதில் கலந்தும் கொள்கிறது. 

இந்த சிறுகதைகளில் நான் மேலே சொன்னவை தாண்டி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன, கிட்டத்தட்ட எல்லாமே நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதைகள், நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள் கதை மிக முக்கியமானது,  இலக்கியமாகவும்,  பேசப்படாதவர்களின் வரலாறாகவும் இந்த கதை முக்கியமானது.  பாதிக்கபட்டவனின் வலியை சுமந்த மகனின் கதை இது,  உண்மையில் இங்கிருக்கும் ஒடுக்கபட்டவர், இவர் எல்லாம் ஒன்றுதான்,  இவர்கள் வளர்ந்த பிறகு தங்களை ஒடுக்கியர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை காண.. இந்த கதை நாயகரிடம் தன் தந்தையின் வலிமிகுந்த வாழ்வின் துயரம் அப்படியே உள்ளது,  ஆனால் அதை உருவாக்கியவனின் மீது வெறுப்பில்லை,  அவன் சந்ததியிடம் கூட தன் தந்தையின் ஞாபகம் வந்ததால்தான் தன்னை மீறிய தார்மீக கோபத்தை தன் அலுவலக செயல்பாடு வழியாக கெளிப்படுத்தினான், பிறகு அதையும் விட்டான். 

இதையெல்லாம் மீறி இம்மாதிரியான சிறுகதைகள் இதையொற்றிய  நம் அனுபங்களை திரும்ப நம்மிடம் கொண்டுவருவதும் வாசிப்பில் கிடைக்க கூடிய இன்னொரு விஷயம் என்று நினைக்கிறேன்.  உதாரணமாக மலரினும் மெல்லியது எனும் சிறுகதை,  இந்த கதை ல பெண் வெறுமையை கடக்க வேறு ஏதுமில்லை,  காமம் மட்டுமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட ஒரு கண்டத்தால்தான்,  கோபிகிருஷ்ணனின் லாகிரி என ஒரு சிறுகதை உண்டு,  சற்றுநேரம் ஒரு ரேசன் கடையில் ஒரு திருமணமான பெண்ணும், திருமணமான கதை நாயகனும் மாறிமாறி பார்த்து ரசித்து கொள்வார்கள்,  கதை அந்த நேரத்து வெறுமையை கடக்கும் போதை அது என்று சொல்லும், இந்த கதை படிக்கும்போது முற்றிலும் வெறுமை கொண்ட இளமை வயதிலிருக்கும் பெண் காமம் எனும் போதையில் விழுவதை தவிர வேறு வாய்ப்புகளே இல்லை என்று எண்ண வைத்தது. சைமன் அதை தவறு என்று எண்ணாமல் தாண்டி தன்னை விடுவித்து கொண்டு நகரும் மனநிலை மேன்மையான மனிதர்களுக்குரியது !  ஆனால் அவன் மன்னித்தாலும், மறக்க வில்லை என்பது தெரியாவார்கள் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்ற வார்த்தைகளில் வெளிபடுகிறது, இவருக்கு நெருக்கமானவர்கள் மனைவியும், மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்ட அவனது அண்ணனும்தான்.  நான் இதுபோல வெளிநாடு போய் குடும்பம் சிதைந்த சிலரை சந்தித்து இருக்கிறேன்,  அதில் ஒருவர் மறக்க முடியாதவர்,  ஒரு மகன் உண்டு, இவர் இல்லாததால் உள்ளே நுழைந்த ஒருவனும், இவர் மனைவியும் சேர்ந்து மகனை மிக கொடுமை படுத்தி உள்ளனர்.  பிறகு இவர் வந்து, அவனை வெளியேற்றி எல்லா பஞ்சாயத்தும் முடிந்து அந்த பெண் தவறை உணர்ந்து இவரும் மன்னித்து சேரும்போது மகனால் அதை ஏற்க இயலவில்லை,  மகனுக்காக அவர் மனைவியை விட்டுவிட்டு ஆனால் அவர் நினைவாக ஏங்கி கொண்டிருந்தார் என்னிடம் பேசும் போது !


சரி குறை சொல்லாமல் முடித்தால் விமர்சனம் என்பது ஒரு சார்பாக அமைந்து விடும் என்பதால்,  இந்த கதையில் சைமன் சாமிக்கு கிடா வெட்டுவதாக வருகிறது,  ஒரு கிரிஸ்துவர் கிடா வெட்ட மாட்டார் என்று நினைக்கிறேன், எனவே கதை ஆசிரியர், அடுத்த பதிப்பில் சைமனை, அவர் மனைவியை, மகளை தாய்மதம் திருப்பும் படி "ஆடிட்டர்" பார்வையில் நின்று கேட்டு கொள்கிறேன்:)