Monday, February 16, 2015

முழுமதி பொங்கல் விழா 2015

நிஷிகசாய் பகுதி, முழுமதி தமிழ்வகுப்பு குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, நான்காமாண்டு முழுமதி பொங்கல் நிகழ்ச்சி, பிப்ரவரி மாதம் 14ம் தேதி காலை தோக்கியோ நக்காமச்சி அரங்கில் இனிதே தொடங்கியது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் திரு ஹிரோஷி யமசித்தா அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜப்பான் தமிழர்களில் மூத்த உறுப்பினரான திரு ஜீவானந்தம் மற்றும் சரஸ்வதி ஜீவானந்தம் அவர்களை கொண்டு சிறப்புவிருந்தினருக்கு மரியாதை செலுத்தினார்கள்.






6500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி மயிலாடுதுறை பகுதியில் கண்டெடுக்கபட்டதையும், அந்த கற்கோடாரியில் சிந்துசமவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் விளக்கி வரவேற்புரையை தொடங்கினோம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகிய நானும்,செம்மலரும். 2006ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அந்த கற்கோடாரி வரலாற்றின் பல இருண்டப்பகுதிகளை வெளிச்சமாக்கியது. இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் மிக பழமையானது சிந்துசமவெளி எழுத்துக்கள்தான். வேதங்களில் மிக பழமையானதாக கூறப்படும் ரிக் வேதத்தைவிட பல ஆண்டுகள் பழமையானது சிந்துவெளி நாகரீகம்.



சிந்துசமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகம் தான். சிந்துவெளியில் வசித்த திராவிடர்கள் பல்வேறு காரணங்களினால் தென்னகம் நோக்கி புலம்பெயர்ந்தனர் என்று அறிஞர்பெருமக்கள் கருதியபோதிலும் போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்தது. கற்கோடாரி தமிழகத்தில் கிடைத்ததும், அந்த எழுத்துக்கள் எப்படி பண்டைய தமிழாக இருக்கலாம் என்று இந்தியாவின் புகழ்ப்பெற்ற ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கியதும் பல முடிவுகளுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால் நமது ஊடகங்கள் இந்த முடிவுகளை கண்டுக்கொள்ளவில்லை.

முழுமதியின் சேவை குறித்து முழுமதி உறுப்பினர்கள் சுதாகர், வேல்முருகன், ரகு மற்றும் கணேஷ் ஏழுமலை ஆகியோர் எடுத்த ஆவணப்படம் ஒளிப்பரப்பபட்டது.

தொடர்ந்து குழந்தைகள் தமது திறமையை ஆடல், பாடல் மூலம் நிருபித்தனர். தமிழர்களின் நாட்டார் கலைகளான தேவராட்டம், பறையாட்டம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்றவற்றைதான் அரங்கின் முகப்பாக செய்திருந்தோம். அதை போலவே இந்த நிகழ்வில் குழந்தைகள் தமிழர் கலைகளைதான் அதிகம் நிகழ்த்திக் காட்டினர்.



பறையாட்டம் ஆடிய குழந்தைகளை மறக்கவே முடியாது.. அப்படி ஒரு லயத்துடன் இணைந்து உண்மையான பறையாட்ட கலைஞர்களை போலவே பிரமாதமாக ஆடினார்கள்..அடுத்து காவடியாட்டம். இந்த காவடிகளை செய்ய எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பது பார்த்தவுடன் புரிந்தது.



பிறகு சினிமா பாடல்களுக்கான நடனம், நாட்டுபுறபாடல்களுக்கான நடனம் என்று பல்வேறு விதமான நடனங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். தமிழ் வகுப்பில் ஒரு நாள் என்ற தலைப்பில், தோக்காய் சீபா பகுதி முழுமதி தமிழ்வகுப்பு குழந்தைகள் ஒரு குறுநாடகம் நடத்தினார்கள். கடல்கடந்து வாழும் சூழலிலும், மொழியை கைவிடாது அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வாரந்தோறும் முழுமதி நடத்தும் இந்த தமிழ் வகுப்புகள் எந்தளவுக்கு குழந்தைகளை கற்கவைத்துள்ளன என்பதை புரியவைத்தது இந்த நாடகம். இயக்குநர்கள் செந்தில்வடிவேலன் மற்றும் அறிவுமுதல்வனுக்கு பாராட்டுக்கள்.



பிறகு நான் எழுதிய “அடுத்த ஆப்பு உனக்குதான்” என்ற குறுநாடகம்.  தமிழ்ச்சமூகத்தை பாதிக்க இருக்கும் மீத்தேன் பூதம் ஆபத்தை பற்றி, கிண்டல் கேலியுடன் நடித்துக் காட்டினோம். என்னுடன் இணைந்து சுதாகர், ரகு மற்றும் விக்ரம் கலக்கினார்கள். இனி ஜப்பான் பகுதியில் ஸ்டேஜ் பிராப்பர்ட்டி ஏற்பாடு செய்யவேண்டுமென்றால், சுதாகரிடம் சொன்னால் போதும். மனுசன் எள் என்றால் எண்ணெயாக இருக்கிறார். கடைசி வரைக்கும், அந்த போராட்ட போர்டை கண்ணுலேயே காண்பிக்கலையே சம்முவம்? ஆனால், நடிப்பில் பட்டாசை கிளப்பினார் சுதாகர். செம நக்கல் உடல் மொழியுடன், மன்னாரு பாத்திரத்தை கண்முன்னே நிறுத்தினாய் தம்பி.. எனவே போர்டு பிழையை மன்னித்தருளினோம்.. பிழைத்து போ. கடைசி நிமிஷம் வரைக்கு திருத்தம் சொல்லி ரகுவை காயவைத்தேன். ஆனால் பொறுமையுடன் எடிட் செய்து காத்தருளினார் ரகு. தம்பி, விக்ரம் உன்னோட வாய்சுக்கு நீ எங்கேயோ போக போற? ஏங்க அந்த போன் வாய்ஸ்லே பேசினது உண்மையாவே தமிழ்தெரியாத ஆசாமியா என்று கேட்டார்கள் உணவு இடைவேளையில்.. எல்லா புகழும் விக்ரமுக்கே.. அனைவரையும் ரிகர்ஸல் என்று நோகடித்த பாவத்திற்க்கு சட்டையை உடனே மாற்ற முடியாதபடி தண்டனை கொடுத்து கடவுள் இருக்காரு கொமாரு என்று காண்பித்தார். கெழட்டிய சட்டையை வால் போல் பேண்டில் சொருகியபடி சீன் மூன்றுக்குள் நுழைந்தேன். அட வசனமே பேசலை அதுக்குள்ள எப்படி இப்படி சிரிக்கிறாங்கே என்று பார்த்தால் வால் தெரிகிறது.. இப்படி எங்களது எல்லா பிழைகளையும் மன்னித்து நாடகத்தை நன்றாகவே ரசித்தார்கள் தோக்கியோ பெருமக்கள். நன்றி மக்களே.





உணவு இடைவேளையில், மீத்தேன் அழிவு பற்றி மே 17 இயக்க நண்பர்கள் எடுத்த ஆவணபடத்தை ஒளிப்பரப்பினோம். சென்ற வருடம் போலவே அருமையான பொங்கல் விருந்தை தயார் செய்து அசத்தினர் ஶ்ரீபாலாஜி உணவகத்தினர். சென்ற வருடம் போலவே, யாழ் நூலக நினைவு புத்தகச்சாலை என்ற பெயரில் தமிழகத்திலிருந்து இலக்கிய புத்தகங்கள், பெரியாரிய, அம்பேத்காரிய புத்தகங்கள் என்று பல்வேறு நூல்களை கொண்டு வந்து ஒரு கண்காட்சியை அரங்கத்திற்க்குள் ஏற்பாடு செய்திருந்தோம். ஏங்க, உங்க புத்தகம் இங்கே கிடைக்கவே இல்லை? என்று கேட்டு எனக்கு ஒரு தம்பி இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இம்மாதிரியான உடன்பிறப்புகளை பெற என்னதவம் செய்துவிட்டேன்?



உணவு அரங்கம் ரொம்ப ரொம்ப பெரியது(?) என்பதால், பாதுகாப்பு கருதி முப்பது முப்பது பேராக உணவருந்த அனுப்பினோம். அதனால் அனைவரும் சாப்பிட சற்று காலதாமதமானது, மன்னிக்கவும். இந்த தாமதத்தின் போது, நம்ம செந்தில் சுப்பையா ரொம்பவே ஜூடாகிவிட்டார். யாரையும் வெளியே நிற்கவிடாமல் தடுக்கிறேன் பேர்வழி என்று போன் பேச வெளியே போன நபரை தடுக்க முயல, அவர் செந்தில் சுப்பையாவை லெப்ட், ரைட் என்று பேரேடு எடுத்துக் கொண்டிருந்தார். சண்டையிலே கிழியாத சட்டை எங்கே இருக்கு? போங்க தம்பி, நாங்கெல்லாம் திட்டு வாங்காத ஏரியாவே இல்லை என்ற ரீதியில் நின்றுக் கொண்டிருந்த செந்தில் சுப்பையாவை பார்த்து அந்த நேரத்தில் நான் கண்ணடித்து கொஞ்சம் ஓவர்தான்.



உணவரங்கத்தில் மிகசிறப்பாக கூட்டத்தை சமாளித்து, அனைவருக்கும் உணவு பரிமாறி வியக்கவைத்துவிட்டனர் பாலு, வேல்முருகன் மற்றும் குகன். வாழ்த்துக்கள் தங்கங்களே..


மதிய அமர்வில், தூய்மையான இந்தியா என்று நடிகர்நடிகைகள் அடிக்கும் கூத்துக்கள் பற்றியும் உண்மையில் அது எப்படி நடக்கவேண்டும் என்பதையும் அழகாக செய்துக் காட்டினார்கள் ஜேஜிசி தமிழ் குழுவினர். ஆனாலும், இந்த குழுவினரின் அலும்புக்கு அளவேயில்லை. அரங்கத்தில் கிடைத்த பொருட்களையெல்லாம் தமது நாடகத்திற்க்கு சமயோசிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். வெளிநாடு சென்று திரும்பும் ஒரு இளைஞர் போல் நடித்த சிவா, ஒரு பெட்டியை தள்ளிக் கொண்டே மேடைக்கு வந்தார். பார்த்தால் அது நான் வைத்திருந்த உடைகளுக்கான பெட்டி அதுபோல் குழந்தைகளுக்கு கொடுக்கவைத்திருந்த புத்தகப்பெட்டியையும் தமது நாடகத்திற்க்கான ஸ்டேஜ் பிராப்பர்ட்டியாக பயன்படுத்திக் கொண்டுவிட்டு, ஒப்பனை அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். பரிசு கொடுக்கும் நேரம், புத்தகங்களை காணாமல், உண்மையிலேயே நாம் இந்தியாவிலிருந்து புத்தகங்களை கொண்டு வந்தோமா இல்லையா என்றெல்லாம் என்னை மண்டையை பிய்த்துக் கொள்ளவைத்த ஜேஜிஸி தமிழ்குழுவினருக்கு அன்பு முத்தங்கள்.. அடுத்த முறை வாங்க பிரதர்ஸ், திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டி புடுறேன்..




நிகழ்ச்சியின் நடுவே அவ்வபோது வினாடிவினா நடத்தப்பட்டு டி.எம்.வி.எஸ் நிறுவனம் வழங்கிய உணவுபொருட்களுக்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட போது, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற கோரி 73 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர் யார் என்று கேட்டபோது சங்கரலிங்கனார் என்று சரியான பதிலை சொல்லி பரிசை தட்டிசென்ற மறத்தமிழர் முழுமதி உறுப்பினரான கணேஷ் ஏழுமலை.வாழ்த்துக்கள்

பிறகு திரு ஹிரோஷி யமோசித்தா அவர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசி கூட்டத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கோவில்கள் பற்றியும், இந்துமதம் பற்றியும் தான் செய்த ஆராய்ச்சிகள், எப்படி சமஸ்கிருதம் கற்கசென்ற தான் தமிழ் கற்க ஆரம்பித்தேன் என்பதை பற்றியும் விரிவாக விளக்கினார். கோவில்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளபோதிலும் தன்னை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் உட்பட பல கோவில்களில் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் என்ன, நானும் இறைவனை பார்த்ததில்லை, அந்த நந்தனாரும் இறைவனை பார்த்ததில்லை என்று அவர் சொல்லியபோது அரங்கே கைத்தட்டலால் அதிர்ந்தது.



பிறகு நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியது. இந்த நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் முன்பே முழுமதி குழுவினர் திரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்திருந்தோம் முழுமதியின் சேவைகள் பற்றி கேட்டறிந்த சகாயம் அவர்களும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். அரசு அதிகாரி என்பதால் தடையில்லா சான்றிதழுக்காக ஒரு மாதம் முன்பே அவர் விண்ணபித்திருந்த போதிலும், கடைசிவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் பயணம் நிகழ முடியாதபடி பார்த்துக் கொண்டது. இந்தியாவில் நேர்மைக்கான விலை இதுதான். இருந்தபோதிலும் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்க்கேற்ப, ஜப்பான் தமிழர்களுடன் சகாயம் அவர்கள் இணையம் மூலம் விழாநாளன்று இணைந்து நேரடியாக உரையாற்றியதை தமிழக அரசால் தடுக்கமுடியாமல் போயிற்று. விழாவிற்க்கு வந்தவர்கள் சகாயத்துடன் நேரடியாக பேசிய திருப்தியடைந்தார்கள் என்றபோதிலும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தி சென்றார்கள்.

இறுதியாக முழுமதி உறுப்பினர் திரு அருள் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.





முழுமதி பொங்கல் விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகுந்த பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் தயாரிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு பரிசாக சிறுவர் இலக்கிய நூல்களை கொடுத்தது, மீத்தேன் எடுப்பதின் விளைவுகள், தமிழை கைவிடுவதுமூலம் அடையாளம் இழக்கும் பேராபத்து, சமூக இயக்கங்களில் பங்கு பெறாமல், சுயநலத்துடன் ஒதுங்குவது மூலம் விளையும் அபாயம் என பல தளங்களையும் தொட்டுச் சென்றதன் மூலம், முழுமதி அமைப்பு மற்றுமொரு வெளிநாட்டு தமிழ் சங்கமல்ல என்பதை ஆணியடித்தது போல்புரியவைத்தது. 

புகைபடங்கள் உதவி - விஜயசிம்மன்

Monday, December 1, 2014

காவியத்தலைவன் - தமிழ்சினிமா தொடாத தளம்

தவம் போன்ற இடைவிடாத பயிற்சியையும், கடுமையான கட்டுப்பாட்டையும் கொண்டு நடிப்புக்கலையின் உச்சத்தை அடைய துடிக்கும் கோமதிநாயகம் பிள்ளையை, தனது கற்பனையை மட்டுமே கொண்டு, கலையை கைவசப்படுத்தி, கடந்து செல்கிறான் காளியப்பா பாகவதர். தான், உயிருக்குயிராய் நினைக்கும் குருவும், காளியின் கற்பனையாலும், ஆர்பாட்டமில்லாத இயல்பான நடிப்பாலும் தூண்டபடுகிறார்.. அவனையே ராஜபார்ட் வேஷத்திற்க்கு பரிந்துரைக்கிறார்.


தான் செய்த வேள்வி போன்ற பயிற்சிக்கும், கடைபிடித்த ஒழுக்கத்திற்க்கும் என்ன அர்த்தம்? ஒழுக்கமற்றவனின் கலை, எப்படி தனது கலையை விட மேலானதாகும்? என்ற கேள்விகளால் நொந்து போகிறான் கோமதி நாயகம் பிள்ளை.. காளியப்பா பாகவதரை, தனது வாழ்வின் வெற்றி மூலம் வென்றுவிட துடிக்கும் போராட்டமே காவியத்தலைவன்.




1930களின் தமிழகநாடகமேடை வரலாற்றைக் கொண்டு ஒரு திரைக்கதையை எழுதி, அதை சினிமாவாக எடுக்க முயன்ற துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். வறுமையான வாழ்க்கை சூழலால் தள்ளப்பட்டு ஐந்து வயதிலேயே நாடக உலகிற்க்குள் தள்ளப்பட்டு, கந்தர்வகுரலோன் என்று செல்லுமிடங்களிலெல்லாம் வெற்றிக்கொடிநாட்டி தனது 28வது வயதிலேயே மறைந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கை, ஒரு சினிமாவுக்குண்டான உணர்ச்சிகரங்களால் நிரம்பியது.



எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாத மகத்தான ஆளுமை கே.பி.சுந்தராம்பாள். சிறுமியாக புகைவண்டிகளில் பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாளை, ஒரு மேதை கண்டெடுத்து, நாடக உலகில் அறிமுகப்படுத்துகிறார். தனது இனிமையான குரலாலும், உணர்ச்சிகரமான நடிப்பாலும் நாடக உலகின் முடிசூடா ராணியாக வலம் வருகிறார், கே.பி.எஸ். இலங்கையில் தங்கி நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் சுந்தராம்பாளுக்கு இணையாக நடிக்க நாடக நடிகர்கள் தயங்குகிறார்கள்.. எஸ்.ஜி.கிட்டப்பாவை ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள்.. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டாம், அவர், உன்னை நாடக மேடையிலேயே, தனது நடிப்பால் சாய்த்துவிடுவார் என்று இருவரையும் தனித்தனியாக எச்சரிக்கிறார்கள் நலம்விரும்பிகள். சவாலை ஏற்று இருவரும் இணைந்து ஒருவரை ஒருவர் வெல்ல முயலுகிறார்கள்..கலையின் வடிவமாக ஒருவரை ஒருவர் கண்டுக் கொள்கிறார்கள்.. மனமொத்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள்..பிறகு, வாழ்க்கையின் சவால்களை வெல்லமுடியாமல், கசப்புணர்வு கொள்கிறார்கள்.. மதுவில் விழும் கந்தர்வகுரலோன், பல இழப்புகளுக்கு பிறகு தனது 28 வது வயதிலேயே இறக்கிறார்.தனது 25வது வயதில் வெள்ளையுடை அணிந்து, இனி யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சபதமெடுத்து அதன்படி தனது வாழ்க்கை முழுவதும் தனியராகவே இருந்து மறைகிறார் சுந்தராம்பாள்.




காவியத்தலைவனில் காளிக்கும், வடிவாம்பாளுக்குமான வாழ்க்கை ஒரு சிறுபகுதிதான்..காளியை வென்றுவிட துடிக்கும் கோமதிநாயகத்தின் மனப்போராட்டமே, கதையை நிகழ்த்திச் செல்கிறது. ப்ருதிவிராஜ், சித்தார்த் இருவருக்குமே, தாங்களும் திரையுலகில் இருந்தோம் என்ற தடத்தை விட்டுச் செல்வதற்க்கான வாய்ப்பு இது.

துரோணரின் மதிப்பை பெற்று, அர்ஜுனனை வென்று தான் முதல்மாணவனாக வேண்டும் என்ற அஸ்வத்தாமனின் துடிப்பை, பொறாமையை, ஆற்றாமையை அழகாக பிரதிபலிக்கிறார் ப்ருதிவிராஜ்.

தான் நினைத்தது போலவே வெற்றிப் பெற்று, பல நாடுகளுக்கும் சென்று புகழ்பெற்று, தான் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்று பெருமிதம் மிளிர திரும்பும் கோமதிநாயகம், தமிழகத்துக்கு வந்தவுடன் விசாரிப்பது காளியப்ப பாகவதரை பற்றி. வாழ்க்கை முழுவதும் கோமதிநாயகத்தை, தூங்கவிடாமல் துரத்தியடிப்பது, காளியின் கலைமீதுள்ள பயம் தான். கோமதியால், காளியின் கலையை இறுதிவரை புரிந்துக் கொள்ளமுடியவில்லை.. குருவிடம் கேட்கும் போது, "எல்லாத்தையும் விளக்க முடியாது, சிலதை உணரனும்" என்று சொல்லிச்செல்கிறார்.. ஆனால் தன்னுடைய கலையை விட காளியின் கலை ஏதோ ஒரு தளத்தில் மேன்மையானது என்ற அச்ச உணர்வே கோமதியை, 
உடல்நலன் குன்றி படுக்கையில் கிடக்கும்போதும், காளிக்கு ராஜபார்ட் கொடுக்கவிடாமல், தானே நடிக்கும்படி செய்கிறது. ஆனால், எல்லாவற்றையும் இழந்து, குடியில் அழிந்துக் கொண்டிருக்கும் நிலையிலும், கர்ண மோட்சத்தில் அர்ஜுனனாக ஒரே ஒரு காட்சியில் தோன்றும் காளி, தனது உன்னதமான நடிப்பால் மக்களை வெல்கிறான்... மீண்டும் புகழ்பெறுகிறான்.


பழிசுமத்தப்பட்டு, குருவின் சாபத்துக்கு ஆளாகி துடிப்பது, குருவின் குற்றத்தால், காதலியை இழந்த சுயஇரக்கத்தில், குருவுக்கே சாபம் கொடுப்பது என தமிழ் சினிமா தொடாத தளங்களில் கதை பயணிக்கிறது. 1930களின் சூழ்நிலையை காட்சிபடுத்துவதில் பெருமளவு வெற்றிப்பெற்றிருக்கிறார் வசந்தபாலன். ஐந்து வருடங்கள் கழித்து, குடியில் தள்ளாடியபடி எதிர்பாராமல், காளி கோமதிநாயகத்தை சந்திக்கும் காட்சி படத்தின் உச்சங்களில் ஒன்று.. ராஜமார்த்தாண்டன், தனது குரு பேராசிரியர் ஜேசுதாசனை சந்திக்கும் அறம் சிறுகதையை நினைவுபடுத்துகிறது இந்த காட்சி..

உலகமே கொண்டாடினாலும், காளியின் மதிப்பை பெற போராடுகிறாள் வடிவு..காளியின் கலையின் மீதான தன்னுடை பித்தை எதன் பொருட்டும் இழக்காமல், காளிக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். வெளியேறும்போது "ஜமினுக்கு மகளை அனுப்பும் அம்மா எனக்கும் தேவையில்லை" என்ற ஒரு வரி வசனத்தில், அன்றைய சூழல் விளக்கப்பட்டு விடுகிறது.. 

காளியைக் கொல்லுமளவுக்கு கோமதியை தூண்டுவது எது? குருவின் அன்பு, வடிவாம்பாளின் காதல், மக்களின் பாசம் என எல்லாவற்றையும் காளியிடம் இழக்கும் கோமதிநாயகத்தின் மீது பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்துவதில் படம் வெற்றிப்பெற்றுவிடுகிறது. இந்த இழப்புகள் அனைத்தையும் விட, நாடக காண்ட்ராக்டரிடம் தான் இழந்த நகைகளை காளி மீட்டு வந்து தன்னிடமே கொடுத்ததைதான் தன்னால் மன்னிக்கவே முடியவில்லை என்கிறான் கோமதி.. பகைமையின் உச்சக்கட்ட கொடூரத்தை, மனதின் விசித்திரத்தை, வசனத்தின் வழியாக வரைந்துவிடுகிறார் ஜெயமோகன்.


வாழ்க்கையின் எல்லாபடிகளிலும் தொடர்ந்து காளியால் தோற்கடிக்கப்படும் கோமதிநாயகம் பிள்ளை, காளியை கொன்றுவிடுவது மூலம், அவனை வென்றுவிடலாம் என்று, துணிகிறான். ஆனால்,  காளி, தனக்கு கோமதியால் இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்தே இருப்பதாக சொல்கிறான். இதை வெளிப்படுத்தும் தருணத்தில், கோமதிநாயகம் இழியுணர்ச்சியால் மேலும் பலபடிகள் பின்னோக்கி தள்ளபடுகிறான். என்னை கொல்வதன்மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும் என்றால், நான் சாகத்தயார் என்று சொல்வதன் மூலம், காளி வெல்லவே முடியாத இடத்துக்கு உயர்கிறான். இனி அவனை கொல்வதன்மூலம் ஒருபோதும் தன்னால் வெல்ல முடியாது என்று புரிந்துக் கொள்ளும் கோமதி, கையில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்த சூழலில் அவனை கொல்லாமல் விடுவதன்மூலம் தன்னுடைய விடுதலையை அடைய நினைக்கிறான். அதற்கு வாய்ப்பளிக்காமல் காளி இறந்துபோகிறான். கோமதி, காளியின் மீது கொண்டிருந்த வெஞ்சினத்தை தெரிந்துவைத்திருந்த போதும், தொடர்ந்து காளி அவனை மன்னிப்பதன் மூலம், கோமதியை மீள முடியாத இழிவுணர்ச்சிக்குத் தள்ளுகிறான். காளிக்கு தன்னுடைய கலையின் மேன்மை புரிந்திருக்கிறது. சொல்லபோனால், பெருந்தன்மை மற்றும் மன்னிப்பு மூலம் காளியும் கோமதியை தண்டித்துக் கொண்டேதானே இருக்கிறான்.


படத்தின் குறைகள்? உண்டு. உண்மையில் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நிகரான வேடம் கொண்ட நாசரின் பாத்திரம் மீது, சில காட்சிகள் மூலம், நமக்கு பெருமதிப்பும் வியப்பும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் இயக்குநர். அதுவே பிற்பாடு நிகழும் சீடர்க்குள்ளான போட்டிக்கு சரியான களமாக அமைந்திருக்கும்..  அதே போல், வடிவாம்பாள் பாத்திரத்தின் கனத்தை, கோமதி அவள் மீது கொண்டிருக்கும் பிரேமையை, பார்வையாளனுக்கு சரியாக கடத்தியிருக்கவேண்டும். இவையிரண்டும் நிகழ்ந்திருந்தால், கோமதியின் இழப்பை, ரசிகன் இன்னும் ஆழமாக புரிந்துக் கொண்டிருக்க கூடும்.

சுவாமிகள் மீது இயல்பாக ஏற்ப்ட்டிருக்க வேண்டிய வியப்பையும் மதிப்பையும், குறைப்பதில் ஆரம்பக்கட்ட காமெடிகாட்சிகளுக்கும் பங்குண்டு. இசை தனிஆல்பமாக சிறப்பானது. பின்ணனி இசையும் சரியாக பொருந்தியுள்ளது ஆனால், பாடல்கள் 1930களின் இசையை பிரதிபலிக்கவில்லை. பாகவதர் பாடல் போன்ற பாவத்துடன் கூடிய ஒருபாடல் இதை சரிக்கட்டியிருக்க கூடும்.




இது போன்ற குறைகள் இருந்த போதிலும், காவிய தலைவன் தொட்டிருக்கும் இடம் அலாதியானது..மரியாதைக்குரியது. நான் பார்த்த தோக்கியோ திரையரங்கில், பார்த்தவர்கள் அனைவரும் படம் முடிந்தவுடன் கைத்தட்டினார்கள். இதில் ஜப்பானியர்களும் அடங்கும். ஒரு நல்லபடத்தை பார்த்த திருப்தி அவர்களது முகத்தில் இருந்தது.