Tuesday, December 3, 2013

குடை நிழல் தந்த மமதை - தெளிவத்தை ஜோசப்

ஈழ எழுத்தாளர்களில், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரது எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இருவரின் எழுத்துக்களிலும் எனக்கு பிடித்த பொதுவான விஷயம் அங்கதம் தான். அ.முத்துலிங்கம் தொடர்ந்து பல நாடுகளிலும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருக்கிறார். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பணி புரிந்திருக்கிறார். அந்த வாழ்க்கையில் கண்ட ஏற்றதாழ்வுகள், பார்த்த பலதரப்பட்ட மனிதர்கள், சுகதுக்கங்கள் தந்த பக்குவம், வாழ்வு குறித்து ஒரு எள்ளல் பார்வையை முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதுவே எழுத்திலும் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த எள்ளல் குதித்தோடி நம்மை கட்டிபோடுகிறது.

ஷோபாசக்தியோ புலிகள் இயக்கத்தில் சில காலம் இருந்தவர். பிறகு சோஷலிச சிந்தனையில் உந்தப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி,குடிபெயர்ந்தவர்.போராட்ட வாழ்வில் கண்ட தியாகங்கள், அபத்தங்கள்,பொருளற்ற இறப்புகள், தற்செயல்களே வரலாற்றை நிர்ணயிக்கும் காரணிகளாக,மாறும் அபத்தம் அவருக்கு வேறுவிதமான பகடியை தந்திருக்கிறது. உதாரணம், "கப்டன்" சிறுகதை. 

இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை இருவருமே ஈழத்தமிழ்ர்கள். ஆனால், 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஸ் அரசாங்கத்தினரால் தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்க்காக  இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்பட்டு, 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தால், ஒரே இரவில் நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையக தமிழர்களிடம் இருந்து அவர்கள் வாழ்வை எழுத்தில் வடிக்க கூடிய சொல்லிகொள்ளும்படியான எழத்தாளர்கள்  தோன்றவில்லை என்றே நினைத்திருந்தேன். 



இந்த பின்புலத்தில்தான், இந்த வருட விஷ்ணுபுரம் விருது, தெளிவத்தை ஜோசப் என்ற மலையக தமிழருக்கு வழங்கபடுவதை குழுமம் மூலம் அறிந்து, அவரது குடை நிழல் நாவலை வாசித்தேன். எந்த அரசியல் பின்புலமும இல்லாத ஒரு சாதாரணன், தமிழனாக பிறந்த ஒரே காரணத்தால் சிங்கள் பெரும்பான்மை அரசின் கொடுமைகளுக்கு ஆளாக்கபடுவதை இந்த நாவல் விவரிக்கிறது. எளிய நடையில் ஒரு டைரிகுறிப்பு போல் நேர்கோட்டில் பயணித்து, நமக்கு பயங்கரத்தின் முகத்தை அடையாளம் காட்டுகிறது. பணத்தை ஒரு சிங்கள வீட்டு உரிமையாளனிடம் பறி கொடுத்த காரணத்தால் போலிஸில் புகார் கொடுக்க, அதுவே விணையாக, பயங்கரவாதி என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பில் சித்ரவதைகளுக்கு பிரச்சித்தி பெற்ற நாலாம் மாடிக்கு இழுத்து செல்லபடும் நாயகன், கைது செய்யபடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல்.

நாம் முன்பு பார்த்தது போல், இந்த நாவலில் எந்த அங்கதத்திற்க்கும் வேலையில்லை. ஒரு பயங்கரத்தை அதன் போக்கில் விவரித்து போவதிலேயே வாசகனுக்கு உணர்த்த வேண்டியதை, செவ்வன செய்து விடுகிறது இந்த நாவல். எந்த முறைமையும் இன்றி யார் வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு, அமைதியான குடும்ப வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகடிக்கபடலாம் என்கிற நடைமுறை யதார்த்தம் நாவலில் விவரிக்கபடும்போதுதான் அதன், தீவிரம் உறைக்கிறது.

இந்த நாயகனுக்கு, கொரில்லா, ம் போன்ற நாவல்களில் வரும் நாயகனை போன்று, வாழ்க்கையில் மிக பெரிய கொள்கைகளோ, உரிமை போராட்டங்களோ இல்லை. எந்த அரசியலும் இல்லை. சாதாரண குடும்பஸ்தனாக தனது மகனை ஒரு நல்ல பள்ளி கூடத்தில் படிக்க வைப்பதற்க்காக, ஒரு நல்ல வாடகை வீட்டில் வசிப்பதற்க்காக ஆசைபடுகிறான். பிறந்து வளர்ந்து, முப்பது வருடங்கள் உழைத்த ஒரு பூமியில் இந்த சாதாரண ஆசை கூட அவனுக்கு அவனது இனத்தின் காரணமாக மறுக்கபடுகிறது. 


சரி, நடைமுறை யதார்த்தத்தை சரியாக ஆவணபடுத்துவதில் வெற்றியடையகிறது இந்த நாவல். இது இலக்கியமாக ஆவது எதனால்? நாயகனின் தாய் வாழ்ந்த வாழ்வை விவரிப்பதிலும், அதன் நுண்ணிய சித்தரிப்புகளிலுமே இது இலக்கியமாக மிளிர்கிறது.இரண்டாயிரம் ஏக்கர் தோட்டத்திற்க்கு கங்காணியாக, பணத்தில் புரளும் நாயகனின் தந்தை, வெளவால், காளான் கறியுடன், கள்ளு குடிப்பதில் தொடங்கி, கோட்டு போட்டு கொண்டு சம்பள நாளில் பவனி வருவதை சித்தரிப்பது, கிருஷ்ணா கள்ளுக்கு பாளை கட்டுவது  என நுண்ணிய விவரிப்புகள்.  பாவற்காய் கசப்பில் வளர்ந்த புழு போன்ற உவமைகள், வீட்டு உரிமையாளரின் பேரம் என ஒரு சுவையான கதை சொல்லியாக ஜோசப் மிகவும் கவர்கிறார்.


கள்ளின் போதையில், சுருட்டு பற்ற வைக்க காகிதமில்லாது, சம்பள பணத்தின் நோட்டுகளை ஒவ்வொன்றாக உருவி தீயில் காண்பித்து ,பற்ற வைத்துகொள்கிறார். அதிகாரத்தின் ருசியில், குடை நிழலின் மமதையில், அளவுக்கு மீறி ஆடும் நாயகனின் தந்தை, ஒரு நாள் குடிபோதையில் மனைவியை, வேலைக்காரன் கிருஷ்ணாவுடன் இணைத்து பேசுகிறார். வாழ்க்கை முழுவதும் அடிகளையும் உதைகளையும் எந்த முணுமுணுப்புமின்றி தாங்கி வந்த தாய், பொங்கி எழுகிறாள். இருவருக்குமான உறவு முடிந்ததன் அடையாளமாக, இருவரும் இணைந்து இன்புற்றிருந்த கட்டிலை எரிக்கிறாள். பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.அதிகாரத்தின் நுனியில் ஆடிய, தந்தை வாழ்வில் இறுதியில் அழிந்து இல்லாமலாகிறார். 


பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன், நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன், நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை, இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது.தெளிவத்தை ஜோசப்பின் மற்ற எழுத்துக்களை படிக்க ஆர்வமாகயிருக்கிறேன்.

Saturday, November 9, 2013

யதார்த்த சினிமாவின் பிரம்மா - மகேந்திரன் - 2

1981ல் சிவசங்கரியின் கதையை மூலமாக கொண்டு மகேந்திரன் இயக்கிய படம், நண்டு. எளிமையான கதை. அதுவே இந்த திரைப்படத்தின் பலவீனமும் கூட.



லக்னோவில் ஒரு ராஜகுடும்பத்தின் வாரிசான ராம்குமார் ஷர்மா, தனது தந்தையின் நடத்தையால் மனம் நொந்து, அவர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து, சென்னை வருகிறான். அங்கு தன்னுடன் வேலை பார்க்கும் சீதாவுடன் காதல் கொண்டு, சீதாவின் அக்கா கணவர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்கிறான்.

வழக்கமான மகேந்திரனின் நாயகர்கள் போலவே, இந்த படத்தின் நாயகனும், அன்பையும் நல்லொழுக்கத்தையும் குணநலன்களாக கொண்டிருக்கிறான். மகேந்திரனுடன் பழகியவர்கள், புரிந்து கொள்வார்கள். மெல்லிய குரலில், அதிராமல் பேசுபவனாக, ஒரு போதும் பதறாதவனாக, நல்லொழுக்கத்தை கடைபிடிப்பவனாக தொடர்ந்து வரும் மகேந்திரனின் கதைநாயகர்கள், ஒரு வகையில் மகேந்திரனை பிரதிபலிப்பவர்கள்தான். எப்போதும் இது மாதிரியான பாத்திரத்துக்கு, சரத்பாபுவை தேர்வு செய்யும் மகேந்திரன், இந்த படத்தில் ஒரு புதுமுக நடிகரை அறிமுகம் செய்கிறார். ஆனால், சரத்பாபுதான் குரல் கொடுக்கிறார். நாயகியாக உதிரிபூக்கள் அஸ்வினி, மிகை நடிப்பில்லாது, கவர்கிறார்.  சென்னை வரும் ராம்குமாருக்கு மயிலாப்பூர் அருகே ஒரு ஸ்டோர் ஹவுஸில் அறை கிடைக்கிறது. சீதாவும் அங்கு தான் வசிக்கிறாள். ஆஸ்த்மாவினால் தொல்லை அனுபவிக்கும் ராம்குமாருக்கு உதவ சீதா அவனது அறைக்கு செல்ல, மற்ற குடித்தனகாரர்கள் தப்பாக பேசுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

குடித்தனகாரர்களாக, மகேந்திரனின் ஆஸ்தான நடிகர்களான, சாமிகண்ணு, செந்தாமரை, குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் வருகிறாகள். இவர்கள் அனைவருமே பாத்திரத்துடன் ஒன்றி இயல்பாக நடிப்பவர்கள். பழைய ராஜ்தூத் வண்டி, ஸ்டார்ட் செய்வது போல குமரிமுத்து சிரிக்க ஆரம்பித்ததும், மூர்த்தி வாயில் பலூன் வெடிக்க ஆரம்பித்ததும் பிறகு, அவர்களுடைய போதாத காலத்தில் தான். 



அன்பே உருவான ராம்குமாரின் சொந்த ஊரை பார்க்க விரும்புகிறாள் சீதா. லக்னோ செல்லும் ராம்குமாரை, கண்டு ஆனந்தத்தில் மிதக்கும் ராம்குமாரின் தாய், பேரனை பிரிய மனமில்லாமல், அவர்களை அங்கேயே தங்கி விடுமாறு கூறுகிறாள். ராம்குமாரின் தந்தையோ திரும்பவும் அவர்களை விரட்டுகிறார்.சென்னை வந்து, குழந்தை பிறக்கிறது. அக்கா கணவனே வளைகாப்பும் செய்விக்கிறான். இந்த பாத்திரபடைப்பின் தன்மை, முதலில் வில்லன் போல் அறிமுகமாகி பிறகு காமெடியன் போல் முடிவடைவது, பொருந்தாது போகிறது.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளில், ஆஸ்துமா அதிகமாகி, மருத்துவரிடம் செல்லும் ராம்குமாருக்கு, புற்றுநோய் என தெரிகிறது. ஊருக்கு கடிதம் எழுதி தெரிவிக்கிறாள் சீதா. ஆனால் ராம்குமாரின் தந்தையோ, அதை மறைத்து செத்து ஒழியட்டும் என சொல்கிறார். ராம்குமார் சென்னையில் இறக்கும் அதே தருணத்தில் ராம்குமாரின் தாயும் இறக்கிறாள். சீதா, குழந்தைக்காக வாழ்வை தொடர்வதாக படம் முடிவடைகிறது.

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை இதைவந்து கடல் கொண்டு போகும் 

என்ற கவிதை வரிகளுக்கெற்ப, அழகிய சிறிய கவிதை போல் சீதாவும், ராம்குமாரும் தாமாகவே அமைத்து கொண்ட வாழ்க்கை, விதி எனும் மாய அரக்கனால், கருணையில்லாது அழிக்க படுகிறது.

முன்பே கூறியது போல், கதையின் எளிமையால், படம் சுவராஸ்யத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால், ஒரு இயக்குனராக, திரைகதை ஆசிரியனாக மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் மிளிரத் தான் செய்கிறார். அளவான செறிவான வசனங்கள், நம்பும்படியான பாத்திர படைப்பு, யதார்த்தமான சூழல் என ஒரு நல்ல திரைபடத்திற்க்கான எல்லா இலக்கணங்களுடன் பொருந்தியே இந்த படம் அமைந்தது.

எப்போதும் அனைத்து பாத்திரங்களையும் திறம்பட, யதார்த்தத்தில் இருந்து விலகாது கவிதை போல் படமாக்கும் மகேந்திரன், இந்த படத்தில் ராம்குமாருக்கும் அவரது தந்தைக்குமான உறவை சரியாக சொல்ல தவறியிருப்பார். ராம்குமார் மீது அவ்வளவு கோபம் கொள்ள என்ன காரணம் என்பது புரியாமலே போகிறது. லக்னோ காட்சிகளில், சில இடங்களில் ராம்குமாரின் குடும்பம் தமிழ் பேசுவதும், சில இடங்களில் இந்தி பேசுவதும் மகேந்திரன் கையாண்ட ஒரு உத்தியே என நினைக்கிறேன். கதைசூழல் படி அவர்களுக்கு தமிழ் தெரியாது. எனினும், மக்களுக்கு புரிவதற்காக தமிழ் பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.


ஒரு தமிழ் படத்தில், இரண்டு இந்தி பாடல்களை முழுமையாக வைக்க மகேந்திரனால் வைக்க முடிந்த்து என்றால், கதையின் மீது இருந்த நம்பிக்கையுடன், ராஜாவின் இசை மீது இருந்த நம்பிக்கையுமே காரணம். கைஸே ககூன் என்ற இந்தி பாடல், மொழி புரியவிட்டாலும், இசையால் கட்டிபோடுகிறது. சென்னை காட்சியில், இந்தி பாடலை வைத்த மகேந்திரன், லக்னோவில் காலத்தால் அழிக்க முடியாத பாடலான அள்ளி தந்த வானம் அன்னையல்லவா”  பாடலை காட்சிபடுத்தியிருப்பார்.




மகேந்திரன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அசோக்குமார், வழக்கம் போல காட்சிகளை அழகாக படமாக்கியிருப்பார். இளையராஜாவும் இந்த படத்தை கைவிடவில்லை. இவ்வளவு இருந்தும், பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான பாத்திரங்களோ இல்லாத ஒரே காரணத்தால், தோல்வியை தழுவியது. எனினும், சக மனிதர்கள் மீதான அன்பையும், பிரதிபலன் கருதாது  உதவும் எளிமையான மனிதர்களையும், அழகாக காட்சிபடுத்தியதன் மூலம், மகேந்திரன் முயற்சிகளில் ஒரு தரமான படமாகவே, இத்திரைப்படம் திகழ்கிறது.