Tuesday, March 3, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிட கட்சிகளால் வீழ்ந்தோமா?



திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்கள் போல திராவிடத்தால்தான் நாம் வீழ்ச்சியடைந்து இருக்கிறோம். திராவிடத்தை வீழ்த்திவிட்டால, போதும், தமிழினம் எல்லா புகழையும் அடைந்துவிடும் என்று சிலர் கண்டுபிடித்து, தொடர்ந்து சில வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். சரி, என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று பார்த்தால், திராவிட கட்சிகளின் போதாமைகளை, தவறுகளை, திராவிடத்தின் தவறுகளாக, திரிக்கிறார்கள். பெரியார், தமிழை விடுத்து ஆங்கிலத்தை படியுங்கள் என்று சொன்னார். எனவே, பெரியார் சொன்ன திராவிடம்தான் நமது எதிரி என்று அறிவுக்கு சற்றும் பொருந்தா வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கபடுகின்றன.



முதலில், திராவிடம் என்பது ஒரு கருதுகோள் (concept). திராவிடத்தை முதலில் அறிவித்தவர் பெரியார் அல்ல. திராவிட மொழிகளை ஆராயந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammer of the Dravidian or south Indian Family of languages)  என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் (1814-1892) தான் திராவிட கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர். அதை தொடர்ந்து திராவிட கருத்தாக்கத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர், அயோத்திதாச பண்டிதர் (1845-1914). ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அயோத்திதாச பண்டிதர், மிகப் பெரிய கல்விபின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பட்லர் கந்தப்பனால்தான், இன்று நமக்கு திருக்குறள் என்கிற மாபெரும் பொக்கிஷம் திரும்ப கிடைத்தது. ஓலைசுவடிகளில் இருந்த திருக்குறளை, எல்லீஸ்துரையிடம் கொடுத்து நூலாக்கியவர் இவர்.



சரி, கால்டுவெல் முன்வைத்த திராவிட கருத்தாக்கம் என்ன? திராவிட மொழிகளை ஆராயந்த கால்டுவெல் சில முடிவுகளுக்கு வந்தார். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த மொழிகள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், தமிழ்மொழிதான். தமிழ்மொழியிலிருந்தே, மற்ற திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்திருக்க வேண்டும். எனவே திராவிடத்தின் ஆணிவேர் தமிழும் தமிழினமுமே என்பதே கால்டுவெல் முன்வைத்த கருத்தாக்கம்.

தமிழின் தொன்மையையும், சிறப்பையும் இந்த கருத்தாக்கம், உலகறிய செய்வதாலயே அயோத்திதாச பண்டிதரும் இந்த கருத்தை ஏற்று  1885ல் திராவிட பாண்டியன் என்ற இதழை தொடங்குகிறார். இதே காலக்கட்டத்தில் தமிழன் என்றொரு பத்திரிக்கையையும் நடத்துகிறார், அயோத்திதாச பண்டிதர். ஆக, திராவிடன் என்பவன் தமிழன் தான் என்கிற கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறார்.  பிறகு, 1891 ம் ஆண்டு திராவிட மகாஜன சபை என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி முன்னோடியாக விளங்குபவர் அயோத்திதாச பண்டிதர் தான்.

திராவிட கருத்தாக்கம், கால்டுவெல் காலத்திலேயே, அறிவுலக சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கில் வந்துவிட்டது. திராவிட மகாஜன சபைக்கு பிறகு, 1894லில் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை தொடங்குகிறார், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஜான் ரெத்தினம் என்கிற கிருத்துவ துறவி.

இவையெல்லாம் நடந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பின்தான், பெரியார் 1944ல் திராவிட கழகத்தை தோற்றுவிக்கிறார். எனவே பெரியார்தான் திராவிடத்தை புகுத்தினார் என்பது சற்றும் பொருந்தாத ஒன்று. பெரியார் மதிக்கபடவேண்டியது ஒரு புரட்சியாளராகதான். அவர், அன்றைய காலக்கட்டத்தில் எதையெல்லாம் புனிதம் என்று கருதினார்களோ அவையெல்லாவற்றையும் உடைத்தெறிய வேண்டும் என்கிற வேட்கை கொண்ட ஒரு கலககாரர். வரலாற்றில், பெரியாரின் இடம், பெண்ணடிமைத்தனம், சாதி, மதம், மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்துப் போராடிய ஒரு புரட்சிக்காரர் என்பதே. என்னை, ராமசாமி என்று கூப்பிடு, இல்லையென்றால் மயிராண்டி என்று கூப்பிடு என்று சொன்ன ஒரு கலககாரர், எப்படி மொழியை மட்டும் போற்றுவார் என்று எதிர்பார்க்க முடியும்?

ஆக, பெரியாரும், பெரியாருக்கு பின்வந்தவர்களும், திராவிடம் என்ற கருத்தாக்கத்தை எடுத்தாண்டவர்கள் மட்டுமே. அவர்களுடைய பிழைகளுக்கும் குறைகளுக்கும், திராவிடம் என்ற கருத்தாக்கம் எந்த விதத்திலும் காரணமில்லை. அந்த கருத்தாக்கம் ஏன் தேவைபடுகிறது? திராவிடம் இல்லையென்றால், தமிழின் தொன்மையையும், பிறமொழிகளின் தாயாக தமிழ் விளங்குகிறது என்பதையும் உலகுக்கு விளக்க வாய்ப்பில்லை. 

இந்த திராவிட கருத்தாக்கத்தை, மற்ற திராவிட மொழிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே. நாம் மட்டும் ஏன் அப்படி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்பதே தவறானது. தமது மொழி, தமிழிலிருந்து தோன்றியது என்பதை மற்ற மாநிலகாரர்கள், எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதை அவர்கள் மறைக்கவே முயல்வார்கள். தமிழுக்கு செம்மொழி சிறப்பு என்று சொன்னால் உடனே எங்கள் மொழிக்கும் கொடு என்று சொல்கிற தெலுங்கர்களும், கன்னடர்களும், எப்படி, திராவிடத்தின் மூலமொழி தமிழ் என்பதை ஒத்துக் கொள்வார்கள்?

திராவிட கட்சிகளால் தமிழ் வீழ்ந்திருக்கிறதா? தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், தனித்தமிழ் பெயர்கள் (இதை, பரிதிமாற் கலைஞரின் தனித்தமிழ் இயக்கத்தில் இருந்து எடுத்துக் கொண்டார்கள்), தமிழ் பலகைகள், பெயர்களில் இருந்து சாதியை நீக்கியது, இந்தி எதிர்ப்புப்போராட்டம் என ஒரு சில  நல்ல விடயங்களை தவிர, செய்திருக்கவேண்டிய பணிகள் பலவற்றை திராவிட கட்சிகள் செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

1.  தமிழ் வழிகல்வியை உண்மையிலேயே ஊக்கப்படுத்த விரும்பியிருந்தால், அரசு பள்ளிக்கூடங்களை முறையாக கண்காணித்து நடத்தியிருக்கவேண்டும். தரத்துடன் இயங்கியிருந்தால் பெற்றோர்களும் தமது குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்த்திருப்பார்கள். அரசு ஊழியர்கள் தமது குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று ஒரு அறிக்கை போதும். தமிழ்வழிகல்விதானாகவே அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்ந்திருக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் முக்கியம் என கருதியதால், எந்த திராவிட அரசும் இதை செய்யவில்லை.

2.  முறையான தமிழறிஞர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் திராவிட ஆட்சி காலக்கட்டத்தில் தான் புறக்கணிக்கப்பட்டனர். அந்த இடத்தில், வெற்றுமேடைபேச்சாளர்களும், திரைப்பட கவிஞர்களும் வந்து உட்கார்ந்துக் கொண்டதும் இவர்களது ஆட்சியில்தான். உலகதமிழ் மாநாடு என்று ஒன்றை கூட்டி, தமது குடும்ப உறுப்பினர்களை மேடையில் உட்காரவைத்துக் கொண்டு தமிழறிஞர்களை எழுப்பி நிற்கவைத்தனர்.

3. நூலகங்களை இவர்கள் வேட்டையாடிய ஒரு உதாரணம் போதும். தம்முடைய கட்சிகாரர்களை நூலகத்திற்க்கான நூல்கள் தேர்வு குழுவில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள், தமக்கு வேண்டியவர்களின் நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு அனுப்புவார்கள். இப்படி, உண்மையான இலக்கியங்களும், தமிழாராய்ச்சி நூல்களும் சென்று சேர வேண்டிய இடங்களிலெல்லாம், வெறும் குப்பைகள், சென்று சேர்ந்தன. நூலக விற்பனைக்காகவே, அந்த துறை பற்றி எதுவுமே தெரியாமல், மருத்துவ நூல்களையும், மாட்டுவாகட நூல்களையும் பதிப்பித்து, காசு பார்த்த கொடுமை எல்லாம் திராவிட ஆட்சியாளர்களின் காலத்தில்தான் நடந்தது. இதனால் மறுபதிப்பே பார்க்காமல் அழிந்து போன நூல்கள் ஏராளம். இன்னமும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் பதிப்பிக்கபடாமலேயே அழிந்துக் கொண்டிருக்கும் தமிழ் சுவடிகள் ஏராளமாக உண்டு, என்பது எவ்வளவு பெரிய கேவலம்?

4.  வழக்காடு மொழியாக தமிழை நிறுவ தவறியது. ஆட்சி மொழியாக்காமல் கோட்டை விட்டது என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவையெல்லாம் திராவிடத்தின் தவறா? திராவிட கட்சிகளின் தவறா? இப்படி திராவிடத்தையும், திராவிடகட்சிகளின் தவறுகளையும் குழப்பிக் கொள்கிற நல்ல காரியத்தைத்தான் ஒரு சில தமிழ்தேசியவாதிகள் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, இவர்களில் சிலர், அப்படி என்னதான் மாற்று அரசியலை முன்வைக்கிறார்கள்? என்று பார்த்தால் திராவிட ஆட்சிகளை மிஞ்சுவதாக இருக்கிறது, இவர்களது கொடுமைகள்.

நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த, (இவர்களில் பலர் , காவல்துறைக்கு துப்பு சொல்கிறார்கள் என்று வெறும் சந்தேகத்தால் மட்டுமே கொல்லப்பட்ட ஏழை எளிய மக்கள்), இருநூறுக்கும் மேற்ப்பட்ட யானைகளை கொன்று தந்தங்களை கொள்ளையடித்த, சந்தனகடத்தல், ஆட்களை கடத்தி பணம் பெற்றுக் கொண்டு விடுவிப்பது, என சகல குற்றங்களையும் செய்த ஒரு கிரிமினல், இவர்களுக்கு எல்லைசாமி, சீயான் விரப்பன்.

மதுரையில் பல மலைகளை காணாமல் அடித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறவர், இவர்களுக்கு, அய்யா பி.ஆர்.பி. மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டே, ஒரு பக்கம் வைகுண்டராஜனை, உங்களது திருமணத்திற்க்கு அழைத்திருக்கிறீர்களே? என்று கேட்டால், சொந்தம் வேறு, அரசியல் வேறு என்று பக்கா அரசியல் வசனம்.

காமராஜரையும், கக்கனையும், ஜீவானந்தத்தையும் முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டிய மண்ணில், வீரப்பனை  முன்னிறுத்தும் அவலத்தை எங்கு போய் சொல்வது?

   ஒரு பக்கம் சந்தன கடத்தல் கொள்ளையன் வீரப்பன் படத்தையும், மற்றொரு பக்கம் தம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடிய போராளி பிரபாகரன் படத்தையும் போட்டு பேனர் அடிக்கும் முட்டாள்தனங்கள்.  




    ஏதுமறியா சிறுவன் பாலச்சந்திரன், கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டான் என்கிற இனபடுகொலைக்கான ஆதாரத்தையே சிதைக்கிற விதத்தில், புலிப்பார்வை திரைப்படம் உள்ளதே என்று கேட்டால், படம் எடுத்தவர் ,பெருந்தமிழராக்கும் என்று பதில். 



      இதையெல்லாம் மாற்று அரசியல் என்று நம்பி ஏமார்ந்த, திராவிடத்துக்கும் திராவிட கட்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாத, வரலாறு பற்றி எந்த புரிந்துணர்வும் இல்லாத இளைஞர்களை விட்டு சமூக வலைத்தளங்களில் திராவிடத்தை சராமாரியாகத் திட்டினால் நாம் நம்புகிற புரட்சி வந்துவிடும் என்று சொல்லி, சகோதரச்சண்டையை அரங்கேற்றி, தன்படைவெட்டிசாதலை நிகழ்த்திக் கொண்டிப்பதுதான், உங்களது மாற்று அரசியலா?


       எப்படியாவது திராவிட கருத்தாக்கத்தை காப்பற்றிவிடவேண்டும் என்று எமக்கு ஒன்றும் நேர்த்திகடன் இல்லை. மக்களுக்கு உதவாது என்றால் எந்த கருத்தாக்கமும் மண்ணோடு மண்ணாகட்டும். ஆனால் அதற்க்கும் முன்னால் திராவிட கருத்தாக்கம் என்றால் என்ன? என்பதை மட்டுமாவது,  பாவம் அந்த இளைஞர்களை தெரிந்துக் கொள்ளச் செய்து பிறகு வாதிட சொல்லுங்கள்.  

7 comments:

  1. தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமூகப்போராளியகாத்தான் தன்னை முன் நிறுத்தி கொண்டார். மொழி,இனம், சாதி, மதம் என்று எதன் மீதும் ஒரு புனிதத்துவம் ஏற்படுத்தப்படுவதை அவர் கடுமைஆக எதிர்த்தார். அன்ணாவின் முயற்சியினால் நீதி கட்சி திராவிடர் கழகமாக உருமாறிய பொழுது கூட ஆரிய பிராமணர்களுக்கு எதிரான ஒரு சொல்லாட்சியாகத்தான் திராவிடம் முன் நிறுத்தப்பட்டது.எந்த மொழியையும் முன் நிறுத்தவோ பின் தள்ளவோ பெரியார் விருப்பம் காட்டியதில்லை. எனவே அவரை ஒரு திராவிட கருத்தாக்கத்தின் முன்னோடியாக பார்க்க இயலாது. மாறாக ஆன்மீகத்தின் பேரில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துபோராடவே அவர் முன்னுரிமை தந்தார்.

    தற்பொழுது திராவிட இயக்க ஆட்சிகளின் காரணமாகத்தான் தமிழகம் இந்தி கற்கும் வாய்ப்பை நழவ விட்டதென்றும் அதனால் தமிழகத்திற்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு விட்டது போலவும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படுகிறது. இந்தி கற்காததினால் தமிழகம் எவ்விதத்திலும் பின்னடைவை சந்திக்கவில்லை.மாறாக இந்திக்கு பதிலாக ஆங்கிலம் கற்கப்பட்டதால் மென்பொருள் எழுச்சி ஏற்பட்ட போது தமிழகம் தலை நிமிர்ந்து நடக்க முடிந்தது. வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலைத் தேடி வருவதுதான் அதிகரித்திருக்கிறது.தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது..

    ஆனால் கடந்த 48 ஆண்டுகளாக திராவிடப் பெயரினை கொண்ட கட்சிகளே ஆட்சியில் இருந்தும் தமிழின் வளர்சிக்கு உரிய கவனம் செலுத்தப்படாதது வருத்தத்திற்குறியதே. இந்த திராவிட கட்சிகளின் பங்காளி சண்டையினால் ஈழத்தில் இனம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த போதும் கூட இங்கு இவர்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதே கசக்கும் உண்மை.அன்றக்கு ஆட்சியில் பங்கு வகித்த திமுக தனது அமைச்சு பதவிகளை தூக்கி எறிந்து இனத்திற்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததை எதிர் கட்சியாக இருந்த அதிமுகவாவது தனது நாடாளு மன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து திமுகவிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இந்த இரு கட்சிகளும் செயல்படப் போக இவர்கள் தங்கள் கட்சியின் பெயரில் தாங்கியிருக்கும் திராவிட இயக்கத்திற்கே ஒரு களங்கத்தை உண்டாக்கிவிட்டார்கள். திராவிட கருத்தாக்கம் தமிழையும் இனத்தையும் எழுச்சியுற ஏற்படுத்தப் பட்டது.அதை செய்ய தவறியது அரசியலினால் நீர்த்துப் போன திராவிட இயக்கங்களின் குற்றமே தவிர கருத்தாக்கத்தின் குற்றமல்ல!

    ReplyDelete
    Replies
    1. மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள், அண்ணன். திராவிட கருத்தாக்கம் இப்போது தேவையில்லை. தமிழியம் போதும் என்று கருதினால், அதை ஏற்றுக் கொள்வதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை. ஆனால், திராவிட கருத்தாக்கமே ஏதோ சதிவேலை என்றும், அதை உருவாக்கியவர் பெரியார் என்றும் கட்டமைப்பதில் உள்ள அபத்தம்தான் பொறுத்துக் கொள்ளமுடியாததாக இருக்கிறது.

      Delete
  2. என்ன சொல்வது ? இதைவிட திராவிடத்தை எவரால் விளக்கி விட முடியும், மிக்க மிக்க நன்றி செந்தில்குமார், அருமை, அற்புதம் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா. பயனுள்ளதாக இருப்பின் மகிழ்ச்சி..

      Delete
  3. திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிட கட்சிகளால் வீழ்ந்தோமா?
    இந்த தலைப்பு சரிதான் . ஆனால் எல்லோருமே திராவிடன் என்றால் ஏதோ தமிழன் மட்டும் கன்னடம், மலையாளம், தெலுங்கு என் அனைவரிடமும் ஒற்றுமை பாராட்ட வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பெரியார் பல புரட்சிகள் செய்தவர் . ஆனால் தமிழனிடம் மட்டும்தான் நீ திராவிடன் என்பதை விதைத்து இருக்கிறார். வைக்கத்தில் கூட யாரும் தன்னை யாரும் திராவிடன் என்று சொல்வதில்லை . ஏன் சற்று ஒரு படி மேலே போய் மூனாறு பகுதி வாழ் தமிழர்களுக்கு இரவை சந்திக்க சாலை ஓர விளக்குகள் கூட இல்லை. கர்நாடக அரச பற்றியோ, கன்னட மக்கள் பற்றியோ சொல்ல தேவையே இல்லை.ஆந்திராவின் எந்த ஒரு மனிதனும் தன்னை திராவிடன் என்று ஒப்பு கொள்வதில்லை. சமஸ்கிருதமும், லக்ஷ்மி வழிபாடும் , பெருமாள் பெருமையும் பேசும் போது தான் தெரிகிறது தமிழன் மட்டும்தான் திராவிடன் என்று . திராவிட இனம் என்று கூறிய கால்டுவெல்லின் ப்ராஜெக்ட் வெற்றிபெறவில்லை . இதை ஏற்று கொண்ட காரணத்தால் தமிழன் மட்டும் பிற திராவிட இனத்தவரிடம் தோல்வி அடைவது சரிதான ?

    ReplyDelete
  4. ellam seri thaan, aanal veerapanar meethu ungaluku enna prechanai? ellai kaatha maaveeran enpathu unmai thaan, eppadi periyar patri palarukum puriyavillayo athae pol veerapanar patri ungaluku suthamaga puriyavilai.

    ReplyDelete

Write your valuable comments here friends..