Wednesday, April 1, 2015

இரவெனும் யட்சி

மனிதர்கள், தீவிரமான அனுபவங்களுக்கு ஏங்குகிறார்கள். உச்சக்கட்ட கணங்களை தொட்டுத் திரும்பிய அனுபவங்களையே வாழ்வின் நினைவுகளாக தொகுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான கணங்கள் மிக சிலவையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காட்டில் வேட்டையாடி உணவை சேகரித்த காலக்கட்டத்தில், காட்டின் எதிர்பாராத்தன்மை சில அற்புத கணங்களை மனிதனுக்கு வழங்கியிருக்க கூடும்.

மனித நாகரீகம் முழுவளர்ச்சியடைந்து, இன்று ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கையை சுருங்கியிருக்கிறது. இந்த வாழ்க்கையை நமக்கு முன்னால் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்..எதுவும் புதிதில்லை.   தொடங்கிய இடத்துக்கே, மீண்டும் மீண்டும் திரும்புகிற குடை ராட்டின வாழ்க்கை மாபெரும் சலிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த அர்த்தமின்மை சராசரி மனிதர்களைக் காட்டிலும், ஆழமான தேடலுள்ள மனிதர்களையே அதிகம் துன்புறுத்துகிறது. ஒரு பக்கம் வாழ்க்கை சலிப்பான வட்டத்தில் சுழல்கிறது. மறுபக்கம் மனிதமனம் செயல்படும் விதம் விடுக்கும் சவால்கள், புதிர்கள்.







இந்த மாபெரும் சலிப்பை வெல்லும் பொருட்டே கலை, இலக்கிய செயல்பாடுகள் அமைகின்றன. தூய இசையோ, இலக்கியமோ , ஆழ்மனதுள் ஊடுருவதினாலயே மகத்தான அனுபவமாக மாறுகிறது. வார்த்தைகளை தாண்டி, உள்ளே செல்லும் பயணத்தின் ருசியை ஒருமுறை கண்டவர் விண்டிலர்.

வழமையிருந்து விலகி மாறுப்பட்ட வாழ்க்கையை வாழவிரும்பும் மனிதர்கள், ஒரு தனிக்குழுவாகதான் இயங்க முடியும். அப்படி ஒரு குழு, பகலை வெறுத்து, இரவினில் மட்டும் விழித்திருந்து, இரவை கொண்டாடி வாழ்கிறது. அவர்களிடம் சென்று சேரும் சரவணன் ஊடாக, மகத்தான அனுபவங்களை தருகிறார், தனது இரவு குறுநாவல் மூலம் ஜெயமோகன். மனிதர்கள் இரவினில் வாழப் பிறந்தவர்கள். இரவே ஏகாந்தம். இரவே அழகு என்று இரவை ரசிப்பத்தற்க்காகவே இரவினில் வாழும் விஜய்மேனன், கமலா தம்பதியினர், வாழ்வில் ஏற்பட்ட இழப்பினால் இரவிடம் தஞ்சமடைந்த நீலிமா என விரிகிறது நாவல்.



நீலிமா, சரவணன் இருவர்க்குமிடையேயான காதல், பொங்கி வரும் உணர்ச்சி பிரவாகம். உறவு மலரும் கணமும், விலகல் போன்ற அந்த மெல்லிய விரிசலும், அந்த விரிசலின் மூலமே தன்னைத் தானே கண்டுக் கொள்ளும் காதலும் என சொற்களின் ஊடாக ஒரு கனவு போன்ற அனுபவம். உண்மையில் நீலிமா போன்ற ஒரு தேவதை, தர்க்கத்துடன் பேசத் துவங்கினால் யாரால் மீள முடியும்? யட்சியின் நிசாகந்தி மணம் போல, நீலிமாவின் அன்பு சரவணனை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்பட்டமான பெண், ஆணை கலவரப்படுத்துகிறாள். தன் அந்தரங்கத்தை உடைத்து, எந்த பாவனையுமின்றி உள்ளே நுழையும் பெண்னை தடுத்து நிறுத்துவது எளிதன்று.


விஜய்மேனனும், கமலாவும் ஒரு உதாரண தம்பதிகள். உண்மையில் அப்படி ஒரு கணவன் மனைவி உறவு சாத்தியம்தானா என்று வியக்குமளவுக்கு. சிறிதேனும் குற்ற உணர்ச்சி இருந்தால் மட்டுமே அப்படி ஒரு இலட்சிய உறவு சாத்தியமா? தூய அன்பின் சலிப்பை, சாகஸங்கள் சரி செய்கிறதா?
யட்சியிடம் விழுந்த பிரசண்டானந்தாவின் தவிப்பை புரிந்துக் கொள்ளமுடிகிறது. தீவிரமான அனுபவங்களுக்கு ஏங்கும் சரவணனை, விஜயமேனனை புரிந்துக் கொள்ளமுடிகிறது. யட்சிகள்தான் காட்டைப் போல, யானையைப் போல, இரவைப் போல முழுவதுமாய் அறியமுடியாதவர்களாய் அந்த அறியா முடியாமையினாலயே மேலும் வசிகரிக்க கூடியவர்களாய், நிசாகந்தியின் மனம் பரப்பி அமர்ந்திருக்கிறார்கள்.

பாதர் தாமஸை யட்சிகளிமிருந்து காப்பது கிறிஸ்து அல்ல. அவர் சுமந்திருக்கும் வெறுப்பு எனும் பாவனையே. அந்த வெறுப்பை உறுதிபடுத்திக் கொள்ள, பார்க்கும் பெண்களிடமெல்லாம், எந்த உணர்வுமின்றி, நீ அழகாக இருக்கிறாய் என்கிறார்.

ஜாக்ரத் என பகலை சொல்கிறார் பிரசண்டானந்தா. பகல் பொய்களால் நிறைந்தது. போலித்தனங்கள் கொண்டது. மெல்லிய தோல்போல அது உண்மையை மூடியிருக்கிறது இரவுதான் ஸ்வப்னம். இரவுதான் உண்மையானது. அழகானது. ஆழ்மனதுக்குரியது, என்கிறார். ஆனால், அந்த பகலில்தான் பிரசண்டானந்தாவும் கமலாவும் உண்மையாக இருக்கிறார்கள்.  ஆக எது உண்மை? பகல் உண்மையென்றால், இரவு வாழ்க்கை பொய்யானதா? இல்லை இரண்டுமே உண்மையின் வெவ்வேறு வடிவங்களா?

தான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்க துணிகிறார்கள். கொல்லபடும் யானை பாகனின் மகனும், பாகனாகிறான்.

யட்சிகளாய் வரைந்து தள்ளும் முகர்ஜியின் ஆழ்மனது செல்லுமிடம் ஊகிக்ககூடியதே. இரவுபாடகன் மஜித், இரவினில் மலையாள மனோரமா படிக்கும் தோமா, கடுமையான மன அழுத்தத்தில் தவிக்கும் சரவணன், புனைபெயரில் சமூகதளங்களுக்கு சென்று வசைபாடுவது என ஒவ்வொரு பாத்திரமும், சூழலும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. 

ஜெயமோகனின் மொழி சிறப்பானது, தனித்துவமானது. நாவல்களில் அது முழு வீர்யத்துடன் வெளிபடுகிறது. படிமங்கள், உவமைகளை சர்வசாதாரணமாக உருவாக்கி செல்கிறார் ஜெயமோகன்.




“மரநாய் விட்டுட்டு போன கிளையாகவும் அது போய் உக்காந்த கிளையாகவும் என் மனசு ஆடிட்டிருந்தது”  

இந்த படிமத்தைவிட்டு மனம் இறங்கவேயில்லை.

“காயலுக்குள் ஒரு ரகசியக் கண் திறந்து கொண்டதுபோல நான் ஒரு மீனைப்பார்த்தேன். பின்பு இன்னொரு கண். பின்பு கண்கள். பின்பு கண்களின் பெரு வெளி.  மீன்படலம் சுழிக்க காயலின் பெருவிழி ஒருகணம் இமைப்பதைக் கண்டேன்”

என்ற வரிகளை படிக்கும்போது, அந்த கண்கள் இமைப்பதை படிப்பவனும் காண்கிறான். முதல் வரியிலேயே காட்சிவிரிய தொடங்கிவிடுகிறது.

நீலிமா, சரவணன் இருவருக்குமிடையேயான உறவை சொல்கையில், வெளிபடும் நுட்பம், அபாரமானது.

“அவள் உடல் முதலில் எதிர்விசை கொடுக்கப்பட்டதுபோல இருந்தது. பின்பு நெகிழ்ந்து என் கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல இயைந்தது. பின்பு அவள் உடலில் சுயநினைவு திரும்புவதை என் உடலாலேயே உணர்ந்தேன்.”

இது போன்ற வரிகள் மூலம், யட்சி, தாந்த்ரீகம், சாக்தம், ஆழ்மனது, இரவு வாழ்க்கை என மலையாளக் நாட்டின் காயல் வழியே ஒரு மகத்தான அனுபவத்தை தந்திருக்கிறார்.

2 comments:

  1. Didn't understand who those யட்சிகள் are. Nevertheless, a wonderful read!

    ReplyDelete

Write your valuable comments here friends..