Friday, July 26, 2019

ஒத்திசையும் வெறுப்பு


ஒத்திசைவு ராமசாமி, ஜெயமோகனின் ஜப்பான் பயண கட்டுரை பற்றி எழுதியிருக்கிறார் என்று ஒரு நண்பர் சொன்னார்.  வழக்கம்போல் மட்டையடி கருத்துக்கள் கொண்ட நான்கே நான்கு பாரா கொண்ட பதிவில், எப்படி பொய்யர்கள் நிரம்பிய இந்த உலகில், முற்றுணர்ந்த ஞானியான தான் வாழ நேர்ந்து துன்பங்கள் அனுபவிக்கிறேன் ரீதியான அலட்டல்களே பாதி கட்டுரையை நிரப்பி நிற்க, மீதியில் தனக்கு தெரிந்த விஷயங்களை கூறியிருக்கிறார். இதை உடனே பகிர்ந்து இன்புறும் சில வெறுப்பாளர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எது இவர்களை இவ்வள்வு வெறுப்பு கொண்டவர்களாக, மேட்டிமைத்தடித்தனம் கொண்டவர்களாக மாற்றியமைக்கிறது என்றே யோசிக்கவைக்கிறது.

1.     ஜெயமோகன் தனது கட்டுரையில் சாமுராய் வாட்களையும், நிஞ்சா வாட்கள் என்றழைக்கபடும் வாட்களின் படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த, ராமசாமி, சாமுராய் வாளை போய், ஜெயமோகன் நிஞ்சா என்கிறார். நிஞ்சா என்றெல்லாம் ஒன்னுமே இல்லை என்கிறார். முதலில் நிஞ்சாக்கள் யார் என்பதை பார்த்துவிடுவோம். நிஞ்சா என்றழைக்கபடும் வீரர்களுக்கும் சாமுராய்க்களுக்குமான முக்கிய வேறுபாடு, நிஞ்சாக்கள் பெரும்பாலும் மறைந்துதிரிபவர்கள். இவர்களுக்கு சாமுராய்க்களுக்குண்டான போர் கோட்பாடுகள் எதுவுமில்லை  பெரும்பாலும், நேரடியாக போரில் ஈடுபடாமல், கொலை, உளவு மறைந்திருந்து தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களே ஜப்பானில் நிஞ்சா என்றழைக்கப்பட்டார்கள் இவர்கள் ஈடுபடும் செயல்களின் தன்மையால், சாமுராய் போல் நீண்டு வளைந்த வாட்களை இவர்கள் கொண்டிருக்கவில்லை. குறுங்கத்திகள் போன்றவையே இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிறகு 1960 வாக்கில் நிஞ்சாக்களுக்கான அருங்காட்சியகம்  மியே மாவட்டத்தில் (Ninja museuam of Igaryu ) அமைக்கப்படுகிறது. அதில் நிஞ்சாக்கள் பயன்படுத்திய வாட்கள் 忍者刀  நிஞ்சாட்டோ என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் வடிவமைத்திருப்பது, அளவில் குறைந்த, வளையாமல் நேராக இருக்கும் வாட்கள். சாமுராய்க்கள் பயன்படுத்தும் கடானா வாட்கள் வளைந்திருப்பவை  இதையே தனது கட்டுரை படத்தில் போட்டுள்ளார் ஜெயமோகன். உடனே ஒத்திசைவு தாவிகுதித்து, நிஞ்சாவது குஞ்சாவது என்கிறார். பொதுவாக ஜப்பானிய சாமுராய் மற்றும் நிஞ்சா போன்ற ஜப்பானிய பாத்திரங்கள் ஹாலிவுட் சினிமாவின் வருகைக்கு பின் ஊதி பெரிதாக்கப்பட்டவை. இன்று உண்மையும் புனைவுமாய் ஒன்றி கிடப்பவை. பிரித்தெடுக்கமுடியாதவை. இதையும் தனது கட்டுரையில் பிறகு ஜெயமோகன் தெளிவாக குறிப்பிடுகிறார். ஆனால், அதையெல்லாம் படிக்க ராமசாமிக்கு ஏது நேரம்? படித்த ஒரே ஒரு கட்டுரையை தப்பும் தவறுமாக தனது புரிதலுக்கு ஏற்ப விளக்கி எழுதி, அதை பகிருந்து இன்புறும் மனிதர்கள் ராமசாமியின் அடுத்த கட்டுரையை படிக்க வேண்டாமா?

2.     இரண்டாவதாக ஜப்பானிய மைய நிலத்தின் பெரும்பான்மையான குடிகள் சீனாவில் இருந்து குடியேறியிருக்கலாம் என்கிற ஜெயமோகனின் வரியை வைத்துக்கொண்டு கம்பு சுத்தியிருக்கிறார் ராமசாமி. முதலிலேயே ஜப்பானின் வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையானது. அதில் வாழ்ந்த பூர்விக குடிமக்களை ஜப்பானின் பழங்குடிகள் என்று ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லிவிடுகிறார். இந்த பூர்விக குடிகள் ஐனு என்றழைக்கப்படும் இனக்குழுவினர். பிறகு ஜொமன் என்றழைக்கப்படும் இனக்குழு மக்கள் வருகிறார்கள். இவர்கள் பல பத்தாயிரமாண்டுகளாக ஜப்பானில் வாழ்ந்து வருகிறார்கள் பிறகு வெகுகாலம் கழித்து யயோயி என்றழைக்கப்படும் இனக்குழுவின் குடியேற்றம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் நிகழ்கிறது. இந்த யயோயி இனமும் ஜொமன் இனமும் கலந்து உருவானதே இன்றைய  பெரும்பான்மை ஜப்பானிய இனம் என்பதே ஆராய்ச்சியாளர்கள் கூறுவது. அப்படி ஒரு இனகலப்பு சாத்தியமே. இந்த யயோயி மக்கள் எங்கிருந்து வந்திருக்ககூடும் என்கிற ஆராய்ச்சி முட்டி நிற்பது சீனா மற்றும் கொரியாவிலேயே. இதையே ஜெயமோகன் சீனா மக்களின் குடியேற்றம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் ராமசாமி அப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்று மட்டையடி அடிக்கிறார்.  

3.     ஓப்பீட்டளவில் ஜப்பானில், மகாபாரதம், ராமாயணம் போன்றோ ஒடிசி இலியட் போன்றோ புராணங்கள் அல்லது காப்பியங்கள் கிடையாது. இதையே ஜெயமோகன் ஜப்பானில் புராணங்கள் குறைவு என்று குறிப்பிடுகிறார். ஆனால் உடனே தனக்கு தெரிந்த ஹெய்கே மொனோகத்தாரியை வைத்துக்கொண்டு என்னப்பா இப்படியெல்லாம் எழுதுறே என்று அட்வைஸ் மழைபொழிகிறார். ஹெய்கே மோனோகத்தாரி தாய்ரா மற்றும் மினாமோட்டோ இனங்களுக்கிடையேயான வரலாற்று பகையை கொண்டு 11ம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட புனைவுகள். இதை பிற்பாடு தொகுத்து ஹெய்கேவின் கதை எழுதபடுகிறது. இவ்வகை புனைவுகள் இல்லாத ஒரு இனம் இருக்கமுடியாது என்பது கூட தெரியாதவரா ஜெயமோகன்? அவர் குறிப்பிடுவது ஓப்பீட்டளவில். இவர் உடனே தனக்கேற்ப வளைத்து தனது இதிகாசங்களே இல்லை என்று எப்படி சொல்லலாம் என்று தன்னுடைய நடையில், சவடால் விடுகிறார்.

4.     இவர் எழுதியதில் உச்சக்கட்ட காமெடி கராத்தே என்கிற எழுவு (😊) ஜப்பானில் பிறந்தது அல்ல என்கிற மட்டையடிப்பே. கரா என்றால் ஜப்பானிய மொழியில் வெற்று த்தே என்றால் கைகள். கராத்தே என்கிற வார்த்தையே வெற்று கைகள் என்று பொருள்படுகிற ஜப்பானிய மொழி வார்த்தையே. ஜப்பானின் ஒகினாவா தீவில் முதன்முதலில் கராத்தே என்கிற தற்க்காப்பு பயிற்சி வழக்கத்திற்க்கு வருகிறது. பிறகு ஜப்பான் எங்கும் பரவுகிறது. ஆனால் முருகதாஸ் படம் பார்த்து ராமசாமி போதிதர்மர் தான் சீனாவிலிருந்து கராத்தே என்கிற கலையை ஜப்பான் கொண்டுவந்தார் என்று நம்புகிறாரா என்னவோ. ஆனால் கூகிள் புண்ணியத்தில் ஜூடோவுக்கு மட்டுமாவது ஜப்பான் கலை என்று அங்கீகாரம் கொடுத்துவிடுகிறார் அண்ணாத்தே.

பொதுவாக இவருடைய கட்டுரை நடை வெறுப்பை உமிழ்வது. எங்கேயோ கிடைக்காத அங்கீகாரம் இவர்களை சதா சர்வ நேரமும் கொதிப்பில் வைத்துள்ளது. ஜெயமோகன் பதினாறு கட்டுரைகள் மூலம் ஜப்பான் பற்றிய தனது பிம்பத்தை மிக நேர்மையாக எழுதுகிறார்.  ஒரு அருமையான அறிமுகத்தை நிகழ்த்துகிறார். இந்த பயணம் தனக்கு ஜப்பான் பற்றிய அறிதலுக்கான தொடக்கமே என்றே முடிக்கிறார். இந்த எழுத்தை அணுகுவதிலும் ஒரு நேர்மை தேவை. இங்கிருந்து ஒரு நல்ல வாசகன் தனக்கான பிம்பத்தை நிறுவிக்கொள்வான்.

3 comments:

  1. A good response Senthil. Happy you did it. I am aware of the efforts jeyamohan makes before undertaking a travel - he prepares like a student preparing for an exam of his life time. It is not just a pleasure trip for him. Lowlives can never understand. while mistakes might happen - highlighting only mistakes is motivated with cheap goals

    ReplyDelete
  2. Mr senthil's explanation is fantastic. It shows his knowledge about the history of Japan .

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Write your valuable comments here friends..