Tuesday, February 2, 2021

இசூமியின் நறுமணம் - சிறுகதை தொகுப்பு - விமர்சனம் - விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம்

 இசூமியின் நறுமணம் & பிற கதைகள்- ரா.செந்தில்குமார்:

ஆசிரியர் குறிப்பு:
தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணிப்பொறியியல் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவர். தற்போது டோக்கியோவில் வசிக்கும் இவர் பல இலக்கியநிகழ்வுகளை ஜப்பானில் முன்னெடுத்துள்ளார். இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு இது.
மலரினும் மெல்லிது-
தெரியாத மனுசன் என்ன பெரிய தீமையை செய்ய முடியும்ணே என்று முதலில் சொல்வதற்கும் கடைசியில் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்! செருப்பில்லாதவன் காலே இல்லாதவனைப் பார்த்துத் தேறுதல் கொண்ட கதை. இரண்டு கதைகள் இதில், இரண்டையும் துரோகம் எனும் சங்கிலி இணைக்கிறது.
தானிவத்தாரி-
தானிவத்தாரி என்றால் ஜப்பானிய மொழியில் இருண்ட பள்ளத்தாக்கைக் கடக்கத் துணையாக வரும் பாடல். வாழ்க்கையும் சிலநேரம் இருண்ட பள்ளத்தாக்கைக் கடப்பது போல் ஆகிறது. Momentary weakness வாழ்வைத் தடம்புரட்டுகிறது. அதெல்லாம் தாண்டிய நுட்பம் கஷுமி சிமுராவின் நாட்டுப்புறப்பாடலைக் கடைசியில் நினைவுகூர்வது.
செர்ரி ஃப்ளாசம்-
உணர்வைத் தூண்டும் கதை. பொதுவாக அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்கள் வீட்டுக்கு கடைசியாகத்தான் அந்த விவரம் தெரியும். எது கனவோ சிலருக்கு அதுவே சாபமாகிறது. ஆரம்பத்தில் இருந்தே எந்தத் தகவலும் அனாவசியமாக இல்லாமல் வார்த்தை சிக்கனத்தோடு நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை. ஜப்பானிய டிவி பெண் பற்றிய வர்ணனை வாசகர் மனத்தில் இவர் ஏற்படுத்த விரும்பும் தாக்கத்தை சரியாக விளைவிக்கிறது.
அனுபவ பாத்தியம்:
நிலம், ஓட்டல் தொழில், மளிகைக்கடை போல சில வியாபாரங்களில் முதலாளி தினம் உட்கார்ந்தே ஆக வேண்டும். ராமசாமி, ராஜகோபால் கோணத்தில் சொல்லப்படாமல் அருண் கோணத்தில் கதை நகர்வதால் அதிக அழுத்தம்.
இசூமியின் நறுமணம் -
தாமரைத்தண்டு வறுவல் நிறையப் பேர் சாப்பிட்டிராதது. மிகவும் சுவையானது. குடிப்பவர்களின் பேச்சு பெரும்பாலான நேரங்களில் Sex talkஆக மாறும். டோக்கியோவில் இருக்கும் Culture தான் இப்போது இங்கிருக்கும் Corporateகளில். காலையில் கடுமையான முகமா இரவில் இப்படி எனத் தோன்றும். குடியும் கலவி குறித்த பேச்சுகளுமாக நீளும் கதை, கடைசிப் பத்தியில் ஒரு Quantum jump செய்து கதையின் கோணத்தையே மாற்றுகிறது. மிக நன்றாக வந்திருக்கும் கதை.
அன்பும், அறனும் உடைத்தாயின்-
கதைசொல்லி கதையின் முதலில் சொல்லும் ஒரு தகவலுக்கும், கதையின் முடிவிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. என்ன இருந்தாலும் சிவா பிரியாவிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் இல்லையா? அநாவசியமாக ஒரு வார்த்தை கூட இல்லாத நல்ல கதை.
கனவுகளில் தொடர்பவள்-
இசூமியின் தேடல் தான் கதை. எதையும் திட்டமிடாது வருவதை அந்நேரத்தில் எதிர்கொள்வது. எல்லாமே அவள் வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறது. மணம், மணமுறிவு, கதைசொல்லியுடனான கலவியும் கூட அப்படித்தான். ஆனால் அந்த மெயில் மட்டும் தெளிவாகத் திட்டம் தீட்டிய மெயில்.
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்-
கெட்டகுடியே கெடும் என்பது தான் கதையின் மையக்கருத்து. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் ஆனது.
மயக்குறு மக்கள்:
அதிர வைக்கும் கதை. அம்மாவிற்கு நிச்சயம் அந்தப்பொருட்கள் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கதையில் மேலதிகத் தகவல்கள் போல் சொல்லப்படும் விசயங்கள் கதை முடிகையில் வேறு பரிமாணம் கொள்கிறது.
மடத்துவீடு:
கன்னத்தில் அறைவது போன்ற மற்றொரு கதை. பெண்கள் அதீத பொறுப்பில் குடும்ப நிர்வாகம் செய்யும் இடங்களில் ஆண்கள் அலட்டாமல் இருப்பது வாடிக்கை. ஆனால் சீனிவாச ராவ்.........Playboyஆக முயற்சிக்கும் ராஷேஸ் கூட அந்த வீட்டுக்கு இனிபோகமாட்டான் என்றே தோன்றுகிறது.
சிபுயா கிராஸிங்க்-
ஜப்பானில் நடக்கும் கதை. வாழ்க்கையில் தோல்வி அடைந்த இருவர், அல்லது சராசரி வாழ்வை வாழ விரும்பாத இருவரின் கதை. சுனாமி, அணுஉலை வெடிப்பு எல்லாம் உண்மை. இரண்டு பகுதிகளில் தனித்தனியாக கதாபாத்திரங்கள் பற்றிய Picture, மூன்றாவது பகுதியில் கதை என்ற யுத்தி நன்றாக இருக்கிறது.
நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள் மீண்டும் ஜப்பானைக் கதைக்களமாக வைத்து எழுதியது. Weaker moment எப்போதாவது தான் வரும். ஜப்பானிய கலாச்சாரமும் இந்தியக் கலாச்சாரமும் சந்திக்கும் மற்றுமொரு கதை.நன்றாக வந்திருக்கும் கதை.
பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. மூன்றில் இரண்டு பங்குக் கதைகள் ஜப்பானைக் கதைக்களமாகக் கொண்டவை. இது போன்ற கதைகளே நவீன தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவு படுத்தும். Cross culture கதைகள் என்பது வேறு நாட்டில் வேறு கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் இந்தியப் பார்வையுடன் பார்க்கும் கதைகள். ஜப்பானியக் கதைகளில் நாம் இதைப் பார்க்க முடியாது. பலகாலம் வேறுநாட்டில் வாழ்ந்தவர்கள், வேரை இங்கே விட்டுச் சென்றவர்கள் இது போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதித் தமிழ்இலக்கியத்திற்குப் புதுரத்தம் பாய்ச்ச வேண்டும்.
செந்தில் குமாருக்கு சிறுகதை வடிவமும், வித்தியாசமான கதைக்கருக்களும் கைகூடி வந்திருக்கிறது. இசூமியின் நறுமணம் ஒரு NRI மட்டுமே எழுதக்கூடிய Perfect சிறுகதை. முழுக்க உள்ளூரை வைத்து எழுதிய மயக்குறு மக்களும் நல்லதொரு கதை.
இவர் தவிர்க்க வேண்டியது அறமெனப் படுவது... போன்ற சாதாரண கதைகளை. தி.ஜாவின் கங்கா ஸ்நானம் கதையிலிருந்து எத்தனையோ கதைகள் ஏமாற்றியவர் நன்றாக வாழ்வது பற்றி. அதே போல் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பிலேயே வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் அடிக்கடி வருகின்றன.
இவை மிகச்சிறு குறைகள். தொகுப்பு வருமுன்னரே இவர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இணையத்தில் பார்த்த ரிசல்டை மீண்டும் பள்ளியில் சென்று பார்ப்பது போன்ற உறுதிபடுத்துதலே இந்தத் தொகுப்பு.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..